நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கரண்ட் போயிடுச்சு..." - கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் சென்னையின் பல பகுதிகளில் ஒட்டுமொத்தமாக கேட்கும் ஒருமித்த குரல் இதுதான். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமீபகாலமாக மின்வெட்டுப் பிரச்சனை மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் சென்னையின் நிலைமை மோசமாகியுள்ளது.

நள்ளிரவு நேரங்களில் பல மணி நேரம் நீடிக்கும் இந்தத் தொடர் மின்வெட்டால், கொளுத்தும் அக்கினியில் தூக்கத்தைத் தொலைத்து குழந்தைகள், முதியவர்கள் முதல் வேலைக்குச் செல்வோர் வரை ஒட்டுமொத்த சென்னைவாசிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

The Real Reasons Behind Chennai s Ongoing Power Cut TNEB Explains

தொடர் மின்வெட்டால் அவதி

தொடர் மின் வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவிலேயே வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சில பகுதிகளில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு தங்களது ஆதங்கத்தையும், கண்டனத்தையும் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

பொதுமக்களின் இந்தத் தொடர் புகார்களைத் தொடர்ந்து, மின்வாரியத்தின் மின்தடை கண்காணிப்புக் குழு தீவிர ஆய்வில் இறங்கியது. அதன் முடிவில், சென்னை இருளில் மூழ்குவதற்குப் பின்னணியில் இருக்கும் 3 முக்கியக் காரணங்கள் வெளிவந்துள்ளன.

1. மெட்ரோ பணிகளால் நிலத்தடி கேபிள் சேதம்

சென்னையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் இதர சாலை தோண்டும் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால், இப்பணிகளின் போது பூமிக்கு அடியில் இருக்கும் நிலத்தடி மின் கேபிள்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. இந்த சேதங்கள் தான் திடீர் மின்தடைக்கு முதல் புள்ளியாக அமைந்துள்ளன.

2. அதிகரித்த மின்தேவை

கோடை வெயிலின் தாக்கம் சென்னையில் இன்னும் குறைந்தபாடில்லை. பகல் நேரத்தை விட, நள்ளிரவில் வீடுகளில் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு பல மடங்கு எகிறுகிறது. இதனால், சென்னையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்சபட்ச மின்தேவையானது 5,014 மெகாவாட்டை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த அசுரத்தனமான திடீர் தேவையால் மின்மாற்றிகளில் 'ஓவர் லோடு' ஏற்பட்டு, மின்விநியோகம் தானாகவே தடைபடுகிறது.

3. தொழிலாளர் பற்றாக்குறை

பிரச்சனை என்னவோ தெரிந்துவிடுகிறது, ஆனால் அதைச் சரி செய்ய வேண்டுமே? நிலத்தடி கேபிள்களில் ஏற்படும் பழுதுகளைக் கண்டறிந்து, அதனை உடனடியாகச் சீரமைப்பதற்குப் போதிய எண்ணிக்கையில் தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இல்லை என்கிறது மின்வாரியத் தரப்பு. இந்த ஆள் பற்றாக்குறை தான், பழுதுபார்ப்புப் பணிகளைப் பல மணி நேரம் இழுத்தடிக்கிறது.

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்

மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சென்னையில் அண்ணா சாலை, வேளச்சேரி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் தான் கடந்த சில நாட்களாக மிக அதிக அளவிலான மின்தடைப் புகார்கள் குவிந்துள்ளன.

மின்வாரியத்தின் தற்போதைய நடவடிக்கை

இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பழுதடைந்த கேபிள்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யும் பணிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்.

இந்த 125 ரோந்து வாகனங்களில் பழுதுகளை சரிசெய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் ரோந்து பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னைவாசிகள் மீண்டும் நிம்மதியான நள்ளிரவுத் தூக்கத்தைப் பெறுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+