எதிர்பார்ப்பைக் கூட்டும் 8000 ரூபாய் கூப்பன்! திமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும் பெண்கள் ஆதரவு!
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தல் இந்திய அளவில் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. கடந்த 6 மாதங்களாக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக திமுக ஐந்து ஆண்டுகால திட்டங்களை மக்களிடம் சேர்க்க தீவிரமாக களத்தில் இறங்கிச் செயல்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக பெரிய அளவில் செயல்படவில்லை என்கிற விமர்சனம் இருந்தாலும் கடந்த ஒரு மாதமாக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் மக்களிடையே பேசுபொருளாகாமல் போனதில் எடப்பாடி பழனிசாமி வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுகவின் தேர்தல் பிரச்சாரங்கள் முழுக்க முழுக்க செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களையும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுவதாகப் பார்க்கப்படுகிறது. மகளிர் நலத் திட்டங்களையும் வாக்குறுதிகளையும் முக்கிய தேர்தல் உத்தியாக முன்வைக்கிறது திமுக. பெண்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் கள அளவில் அக்கூட்டணிக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கும் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்படுவது, அடித்தட்டு, நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன், 'விடியல் பயணம்' திட்டத்தின் மூலம் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்வது, ஒரு பெண் மாதம் சராசரியாக 800 முதல் 1,000 ரூபாய் வரை சேமிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நேரடிப் பொருளாதாரப் பலன்கள், குடும்பத் தலைவிகளிடையே ஆளுங்கட்சி மீதான நன்மதிப்பைத் தக்கவைத்துள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கல்வித் துறையில் 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத்தொகை, உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கையை அதிகரித்துள்ள நிலையில், இது இளம் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய சாதனையாக முன்வைக்கப்படுகிறது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அக்கூட்டணியின் பலத்தை மேலும் கூட்டும் வகையில் அமைந்துள்ளன. மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாகவும், புதுமைப் பெண் உதவித்தொகையை 1,500 ரூபாயாகவும் உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இல்லத்தரசிகளுக்கான 8,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வாங்கும் கூப்பன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் போன்ற வாக்குறுதிகள், பெண்களின் பொருளாதாரத் தேவைகளை மையமாகக் கொண்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள பிங்க் பேட்ரோல், 1,000 புதிய குழந்தை காப்பகங்கள் போன்ற நவீன காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்கள், நகர்ப்புற பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இத்தகைய அறிவிப்புகள் தேர்தல் களத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குப் பெண்களின் ஆதரவைப் பெற்றுத்தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications