பெரியாரின் தாடி ரகசியம்... குழம்பிய நண்பர்கள்... சுவையான... சுவாரஸ்யமான பின்னணி..!
சென்னை: பெரியார் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது அவரது தாடியும், கைத்தடியும் தான்.
அந்த தாடியை அவர் எதற்காக வைத்தார் என்பது பற்றி அவரது நண்பர்கள் வட்டத்தில் எழுந்த விவாதத்திற்கு சிந்திக்கும்படியும், சிரிக்கும்படியும் பெரியாரே சுவையான பதில்களை அளித்துள்ளார்.
அந்த சுவாரஸ்யமான நிகழ்வின் தொகுப்பு இதோ;

நண்பர்கள் குழப்பம்
ஒரு நாள் இரவு பெரியார் வீட்டு மாடியில் அவரது நண்பர்கள் ''அய்யா தாடி வளர்ப்பது ஏன்'' என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முக அழகுக்காக தாடி வளர்ப்பதாக என்னிடம் பெரியார் சொன்னார் என்றார் மாயவரம் நடராசன். எஸ்.வி.லிங்கம் என்பவரோ, இல்லையில்லை ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் என்று என்னிடம் கூறினார் என்றார்.

தாடி எதற்கு?
உடனே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், சவரச் செலவு தினமும் நாலணா மிச்சமாகிறது என்றாரே என்னிடம் என்றதும், பட்டுக்கோட்டை அழகிரி, கொஞ்ச நேரம் என்றாலும் இன்னொருவரிடம் தலைகுனிந்து உட்காருவது தன்மானக் கேடாக உள்ளது என்றாரே என்னிடம் என்றார். மேடைஏறி பலரைத் தாக்கித் திட்டும்போது, போனால் போகிறான் கிழவன், வயதானவன் என்று விட்டுவிடுவார்கள் என்று என்னிடம் கூறினாரே என்றார் பூவாளூர் பொன்னம்பலனார்.

பெரியார் கூறியது
அப்போது கி.ஆ.பெ.விசுவநாதம், தூங்குங்கள் நாளை உங்களுக்கு உண்மையான காரணத்தை பெரியாரிடமே கேட்டுச் சொல்கிறேன் என்றார். மறுநாள் சொன்னபடி சென்று அவரது தாடியின் ரகசியம் கேட்டுவிட்டு, தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டேன். தானாக வளர்ந்துவிட்டது. வேறெதுவும் காரணம் இல்லை என்று பெரியார் கூறியதாக அனைவரிடமும் கூறினார்.

செலவு மிச்சம்
அப்போது கருகுடி சின்னையா பிள்ளை, இன்னும் யார் யாரிடம் என்னென்ன காரணங்கள் சொல்லியுள்ளாரோ அதையும் கேட்டு அனைவரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றதும் அனைவரும் சிரித்திருக்கிறார்கள். ஒருமுறை ரயில் நிலையத்திலிருந்து வந்தபோது எதிரில் வந்த ஒருவர் பெரியாரை பார்த்து, நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, எனக்கு பிளேடு செலவு மிச்சம், உனக்கு என்ன நஷ்டம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications