முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஜெயலலிதா தங்கக் கவசம் வழங்கிய கதை! வாக்குறுதியை மறக்காத மனசு!
சென்னை: முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13 கிலோ எடையில் தங்கக்கவசம் வழங்கியதன் மூலம், தனிப்பெரும் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் ஜெயலலிதா.
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக்கவசம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது, யார் அந்தக் கோரிக்கையை அவரிடம் முன் வைத்தது என்பது சற்று சுவாரஸ்யமான தகவல்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நாளை மறுதினம் வரவுள்ள நிலையில் தங்கக்கவசம் தொடர்பான பின்னணியை இங்கே பார்க்கலாம்.

முக்குலத்தோர் வாக்குகள்
எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அதிமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே கணிசமான வாக்கு வங்கி இருந்தது. முக்குலத்தோர் சமுதாய அமைப்புகளும் தங்கள் ஆதரவை அதிமுகவுக்கே அளித்து வந்தன. இதனால் இயல்பாகவே அதிமுகவுக்கும், முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கும் இடையே ஒரு பிணைப்பு இருந்து வந்தது. இதெல்லாம் ஜெயலலிதா காலம் வரை மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. அவரது மறைவுக்கு பிறகு, குறிப்பாக தற்போதைய அரசியல் சூழலில் இது பொருந்தாது.

பசும்பொன் சென்ற ஜெயலலிதா
இதனிடையே நாம் விஷயத்திற்கு வருவோம், கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சி நடைபெற்ற நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக செல்கிறார் ஜெயலலிதா. அங்கிருந்த கோவை காமாட்சிபுரி ஆதினம் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நீங்கள் தான் தங்கக்கவசம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார். இதனை அங்கிருந்த கட்சிக்காரர்களும், முக்குலத்தோர் சமுதாய மக்களும் ஆர்ப்பரிக்க வழிமொழிந்து நீங்கதாம்மா தேவர் சிலைக்கு தங்கக்கவசம் வழங்கணும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜெயலலிதாவிடம் கோரிக்கை
புன்முறுவலுடன் அந்தக் கோரிக்கையை அந்த இடத்திலேயே ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, தாம் அளித்த வாக்குறுதியை கடந்த 2014அம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி நிறைவேற்றினார். அதிமுக நிதியில் சுமார் 13 கிலோ எடைகொண்ட தங்கக்கவசத்தை நான்கரை கோடி ரூபாய் செலவில் செய்து அதனை முறைப்படி முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவித்தார். முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக்கவசம் வழங்கும் நிகழ்வானது 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்றது.

கோவை காமாட்சிபுரி ஆதினம்
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன்ற சென்ற ஜெயலலிதாவுக்கு கடல் அலை போல் திரண்டு வந்து அதிமுகவினரும், ஒட்டுமொத்த தென்மாவட்ட முக்குலத்தோர் சமுதாய அமைப்பினரும் வரவேற்பு அளித்தனர். தங்ககவசத்துக்கு தனது கையாலயே புனித நீர் தெளித்த ஜெயலலிதா, யார் தன்னிடம் கோரிக்கை விடுத்தாரோ அதே நபரிடம் (கோவை காமாட்சிபுரி ஆதினம் ) முறைப்படி ஒப்படைத்தார்.

மதுரை பாங்க் ஆஃப் இந்தியா
இதனிடையே குரு பூஜையின் போது மட்டும் தங்கக்கவசத்தை முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கும் வகையிலும் மற்ற நாட்களில் மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி லாக்கரில் தங்கக் கவசம் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும் அதிமுக சார்பில் தனிக்கணக்கு தொடங்கி வழி வகை செய்தார் ஜெயலலிதா. அதிமுக பொருளாளரும், தேவர் நினைவிட பொறுப்பாளர்களும் இணைந்து வங்கியில் இருந்து தங்கக்கவசத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளன.

வருவாய் அலுவலர்
இதனிடையே இந்தாண்டு அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி பிரச்சனையால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு தரப்புக்கும் பதில், தேவர் நினைவிட பொறுப்பாளர்களும், மாவட்ட வருவாய் அலுவலரும் இணைந்து வங்கியில் இருந்து தங்கக்கவசத்தை பெற்றுக்கொள்ளவும் குருபூஜை முடிந்த பின்னர் மீண்டும் அதனை பாதுகாப்பாக வங்கியில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications