“படிக்காம வீட்டு வேலைக்குப் போய் இருப்போம்”.. - ‘புதுமைப் பெண்’ணால் முன்னேறிய மாணவிகள்
சென்னை: இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில் திரும்பிப் பார்க்கவைத்த திட்டங்களில் ஒன்று 'புதுமைப் பெண்' திட்டம். 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்பதற்குச் சரியான உதாரணம் இந்தத் திட்டம்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, இதனால் பல ஆயிரம் பெண்கள் உயர்கல்வி வாய்ப்பை பெற்றுள்ளனர். வறுமை என்ற பெரிய தடையினால் அவர்கள் கல்வி என்ற சுமையைத் தூக்க முடியாமல் தவிக்கக் கூடாது என்பதற்காக இதனைச் செயல்படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அவரது முயற்சி எந்தளவில் களத்தில் பலனளித்திருக்கிறது? பலரிடம் பேசினோம். கதை கதையாகச் சொல்கிறார்கள் மாணவிகள்.
மாணவி கார்த்திகா, "என் சொந்த ஊர் திருவண்ணாமலை. நான் சென்னையில் தங்கி செவிலியர் படிப்பு படித்துவருகிறேன். சின்ன வயதிலிருந்தே வீட்டில் கஷ்டப்பட்டுத்தான் படிக்கவைத்தார்கள். அடுத்து உயர்கல்வி என்று வரும்போது பெற்றோருக்குக் கொஞ்சம் பயம் இருந்தது.

நான் சென்னையில் வந்து படிக்கத் தொடங்கிவிட்டேன். எப்படி இந்தப் படிப்பைத் தொடரப் போகிறோம்? செலவுகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? என்ற பயம் மனதிலிருந்துகொண்டே இருந்தது.
அந்தக் காலகட்டத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்தப் 'புதுமைப் பெண்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நானும் 6 ஆவது முதல் 12 ஆவது வரை அரசுப் பள்ளியில்தான் பயின்றேன். ஆகவே, அதற்காக விண்ணப்பித்தேன். அதன் மூலம் எனக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதை வைத்து என் படிப்பைத் தொடர்ந்து வருகிறேன்.

இந்த மாதிரி ஒரு சிறப்பான திட்டத்தின் மூலம் எங்களைப் போன்ற ஏழை மாணவிகளின் உயர்கல்வி கனவை நிஜமாக்கி இருக்கிறார் முதல்வர். அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
என் வாழ்நாளில் இந்த உதவி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. யாருடைய பொருளாதார உதவியையும் எதிர்பார்க்காமல் மாதம் ஆயிரம் கிடைக்கிறது. எனவே பலமுறை முதல்வருக்கு என் நன்றியைச் சொல்கிறேன்" என்கிறார்.
இவரைப் போலவே மற்றொரு பெண், "என்னதான் உயர்கல்வி வாய்ப்புக் கிடைத்து கல்லூரியில் சேர்ந்துவிட்டாலும் படிப்பு முடியும் வரை தினமும் கல்லூரிக்குச் சென்றால்தான் அந்தக் கல்வி உறுதி. அன்றாட செலவுகளுக்கு பணம் தேவை. அதுவும் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து செலவு செய்ய வேண்டும்.

அந்த நேரத்தில்தான் பயண செலவுக்கு முதல்வர் தந்த இந்த உதவித்தொகை உதவியாக இருந்தது. மாதம் 500 ரூபாய் நான் பயண செலவுக்காக மட்டுமே செலவு செய்கிறேன். யாரையும் எதிர்பார்க்காமல் என்னால் எனது கல்லூரிக்குச் செல்ல இந்தப் பணம் பெரிய உதவியாக இருக்கிறது" என்கிறார்.
இவரது தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். ஆகவே அவரது குடும்ப பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை.

இஸ்லாமியக் குடும்ப பின்னணியிலிருந்து வந்துள்ள சாதியா தபசம், "நான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறேன். எங்கள் அப்பா டிரைவர் வேலை பார்த்து வருகிறார். அம்மா, ஹவுஸ் ஒய்ஃப் ஆக இருக்கிறார். எங்கள் வீட்டில் மொத்தம் 3 பெண் பிள்ளைகள். என் அக்கா, அரசுப் பள்ளியில்தான் படித்தார். அதன்பின் நர்சிங் படித்தார்.
வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் என்பதால், அப்பாவின் வருமானம் போதுமானதாக இருக்காது. ஆகவே மூன்று பெண் பிள்ளைகளையும் அரசுப் பள்ளியில்தான் படிக்கவைத்தார். நான் வீட்டுப் பொருளாதார நிலைமையைத் தெரிந்துகொண்டு, அரசு மூலமாகக் கிடைத்த வாய்ப்பில்தான் நர்சிங் சேர்ந்தேன்.

அந்த சமயத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் 'புதுமைப் பெண்' திட்டத்தை புதியதாக அறிமுகப்படுத்தினார். அதில் நானும் தேர்வானேன். எனது கல்வி செலவுகளில் பாதியை நானே இந்தப் பணத்தை வைத்துச் சரிக்கட்டிக் கொள்கிறேன். அதனால், அப்பாவுக்கு அதிக கஷ்டம் கொடுப்பதில்லை.
நான் அரசு உதவியில் படித்து வெளியேறிவிட்டால், வருங்காலத்தில் தங்கையின் படிப்பு செலவை அப்பாவால் ஓரளவுக்குப் பார்த்துக் கொள்ள முடியும்" என்கிறார்.

ராஜராஜேஸ்வரி என்ற மாணவி பேசும் போது, "எல்லா வீடுகளிலும் வறுமை என்பது இருக்கும். ஆனால், அடிப்படை வசதிகளைக்கூடப் பெற முடியாத அளவுக்கு உள்ள வறுமைதான் பெரிய கஷ்டம். என் குடும்ப பின்புலமும் வறுமையானதுதான். எந்தளவுக்கு என்றால்? நான் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டு படிக்கும் அளவுக்கு வறுமையானது.
அப்படிப்பட்ட எனக்கு மாதம் ஒரு ஆயிரம் ரூபாயை அரசு கொடுத்து உதவுகிறது என்றால்? மனதிற்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும் சொல்லுங்கள். இந்தப் பணத்தை வைத்துத்தான் என் கல்விக்குத் தேவையான நோட்டு புத்தகங்களை எல்லாம் வாங்கினேன்" என்கிறார் இந்தக் கலை அறிவியல் கல்லூரி மாணவி.

இவரைப் போன்றுதான் சித்ரா. இவர் தற்போது மூன்றாம் ஆண்டு படிக்கிறார். 'புதுமைப் பெண்' திட்டத்தின் மூலம் கிடைக்கும் மாதம் ஆயிரம் ரூபாயைச் சேமித்துத்தான் கல்லூரி கட்டணத்தையே கட்டுகிறேன் என்கிறார்.
இவரது தந்தை தற்போது இல்லை. அம்மாவின் அரவணைப்பில் வளரும் குழந்தை இவர். அம்மா, வீட்டு வேலை செய்து அதன் மூலம் பொருள் ஈட்டி வருகிறார். மிகமிக சாதாரண குடும்ப பின்புலத்திலிருந்து உயர்கல்விக்கு வந்துள்ள முதல் தலைமுறை பெண் இவர்.

இதுவரை 'புதுமைப் பெண்' திட்டம் மூலம் கிடைத்த பணத்தில் 5 ஆயிரம் வரை இவர் சேமித்து வைத்துள்ளேன் என்று பெருமை பொங்கச் சொல்கிறார்.
விழுப்புரம் பக்கம் சின்ன கிராமத்தைச் சேர்ந்த காவ்யாவும் சென்னையில் செவிலியருக்குப் படித்து வருகிறார். இவருக்கு மூன்று தங்கைகள். கொரோனா காலகட்டத்தில் ஊரில் பணி இல்லாததால் சென்னைக்குக் குடிபெயர்ந்தது இவரது குடும்பம்.

இங்கும் வேலை கிடைக்காததால் அந்த நாள்களில் வீட்டு வாடகைகூட கட்ட முடியாமல் திண்டாடி உள்ளனர். அப்படியான இவரே வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தின் பாதி சுமையைக் குறைக்க உதவி இருக்கிறார். அந்தக் காலத்தில் இந்த ஆயிரம் ரூபாய், தனது படிப்புக்கு மிகப் பெரிய உதவி இருந்தது எனச் சொல்லும் இவர் பேசும்போதே தன்னை அறியாமல் கண்ணீரைச் சாட்சியாகக் கொட்டுகிறார்.
இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன? அது யாருக்கான உதவி? என்பதைப் பக்கம் பக்கமாக எழுதுவதைவிட, இவரது ஒரு துளிக் கண்ணீர் முழு அர்த்தத்தைப் புரியவைத்துவிடுகிறது.
இவரைவிட இன்னொரு பெண், தான் தினமும் திண்டிவனத்திலிருந்து சென்னை வந்து படித்துவிட்டுச் சென்றுவந்ததாகவும் அதற்கான பொருளாதாரம் இல்லாததால், வீட்டில் படிப்பை நிறுத்த சொன்னதாகவும் சொல்கிறார்.
இப்போது அரசு தரும் மாதம் ஆயிரத்தால், தன் படிப்பு உயிர்பெற்றுள்ளதாகச் சொல்லும் இவர், கல்லூரி செல்வதற்காக தனக்கான உடைகளைக்கூட இந்த ஆயிரம் ரூபாயை வைத்துத்தான் வாங்கினேன் என்கிறார்.
இப்படி, ஒவ்வொரு மாணவியும் சொல்லும் செய்திகள் நம் நெஞ்சத்தை ஈரமாக்கிவிடும்படி உள்ளன. அந்தக் கண்ணீரைத் துடைத்த மாபெரும் உதவியை முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார். அதை இவர்கள் காலம் தாண்டியும் பேசுவார்கள் என்பது உறுதி.












Click it and Unblock the Notifications