மறக்க முடியாத பாடகி ஆஷா போஸ்லே.. பிரபல பாடல்களை ஷேர் செய்து போற்றும் தமிழ் ரசிகர்கள்
சென்னை: இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற இசை மேதைகளில் ஒருவரான ஆஷா போஸ்லே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நம்மை விட்டு மறைந்துள்ளார்.. 92 வயதாகும் இந்தப் புகழ்பெற்ற பாடகிக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பு, இந்திய இசை ரசிகர்களைப் பெரும் கவலையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.. ஆஷாஜிக்கு என்ன நடந்தது?
கடந்த சில நாட்களாகவே அவருக்கு லேசான உடல்நல பாதிப்புகள் இருந்த நிலையில், நேற்று அவரது நிலைமை சற்று மோசமடைந்துள்ளது.. உடனடியாக மும்பையில் உள்ள ஒரு உயர்தர தனியார் மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆஷா போஸ்லே பேத்தி
இது குறித்து ஆஷா போஸ்லேவின் பேத்தி விளக்கம் தந்திருந்தார்.. அதில், ஆஷாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Chest Infection) காரணமாகவே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தற்சமயம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதுமை காரணமாக அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் குழுவால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஒருபுறம் தகவல்கள் வெளியானாலும், அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் தகவல்கள் மார்புத் தொற்று தொடர்பான சிகிச்சையை உறுதிப்படுத்தின.
இந்நிலையில் நம்மை விட்டு இசைக்குயில் பறந்துள்ளது.. ஆஷா போஸ்லேவின் இசைப் பயணம் என்பது ஒரு சகாப்தம். மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது தனித்துவமான குரலால் ஏழு தசாப்தங்களாகத் திரையுலகை ஆட்சி செய்தவர்.
விருதுகளை பெற்ற ஆஷா
1943-ல் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி என பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தமிழில் இளையராஜா இசையில் இவர் பாடிய 'செண்பகமே செண்பகமே' (எங்க ஊரு பாட்டுக்காரன்), ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய 'வாடி வாடி கைப்படா கத்திரி' (அல்லி அர்ஜுனா) மற்றும் 'செப்டம்பர் மாதம்' (அலைபாயுதே) போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளன.
2000-ம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் மிக உயரிய 'தாதாசாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. மேலும், 2008-ல் 'பத்ம விபூஷன்' விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இப்போது ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, சமூக வலைதளங்களில் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டிப் பதிவிட்டனர். இப்போது அவரது பிரபல பாடல்களை ஷேர் செய்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மும்பையில் ரசிகர்கள் பிரார்த்தனை
குறிப்பாக, மும்பையில் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ரசிகர்கள் மற்றும் இசைப் பிரியர்கள் அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த அத்தனை பேரும் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து அவரது உடல்நிலை குறித்து அடுத்த சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மதியம் அந்த பேரிடி விழுந்துள்ளது.. இந்திய இசை உலகின் ஒரு மாபெரும் அடையாளமாகத் திகழும் ஆஷா போஸ்லே ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசமும் கண்ணீர் வடிக்கிறது.












Click it and Unblock the Notifications