எம்.ஜி.ஆருக்கு தாலாட்டு.. இ.பி.எஸ்.க்கு சிம்மசொப்பனம்.. இருகூர் இளவரசன் புலமைப்பித்தனாக மாறிய கதை..!
சென்னை: எம்.ஜி.ஆருக்கு உறக்கம் வராத இரவுகளெல்லாம் அவரை உறங்க வைத்த ''இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவினால் தொட்டிலை கட்டி வைத்தேன்'' என்ற பாடலை எழுதிய புலமைப்பித்தன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
இவரது மறைவு எம்.ஜி.ஆர். விசுவாசிகளையும், அதிமுகவின் ஆரம்பகால உறுப்பினர்களையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
எம்.ஜி.ஆருடன் பயணித்த எத்தனையோ பேர் இன்று பதவிக்காக, பணத்திற்காக மாற்றுக்கட்சிகளில் ஐக்கியமாகியுள்ள நிலையில் கொள்கை குன்றாக நின்று தனது இறுதி மூச்சு வரை அண்ணா திமுக கரைவேட்டியை கட்டியவர் புலமைப்பித்தன்.

கோவை மாவட்டம்
கோவை மாவட்டம் இருகூரில் பிறந்த புலமைப்பித்தன் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு குடும்ப சூழல் காரணமாக நூற்பாலைகளுக்கு வேலைக்கு செல்லத் தொடங்கினார். நூற்பாலைகளில் வேலைபார்த்துக்கொண்டே போரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து புலமைப்பித்தனுக்கு தமிழாசிரியர் பணி கிடைத்தது. கோவை, நெல்லை என தமிழாசிரியராக இருந்த இவருக்கு சென்னை சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் வேலை கிடைத்தது.

பாடலாசிரியர்
இதற்காக சென்னைக்கு குடிபெயர்ந்த அவர், சினிமாவுக்கு பாட்டு எழுதி தரும் முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த வகையில் எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோயில் திரைப்படத்தில் ''நான் யார், நான் யார்..'' என்ற பாடலை இவர் எழுதியன் மூலம் புகழ் வெளிச்சம் இவர் மீது படத்தொடங்கியது. அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆருக்காக உருகி உருகி பாடல் எழுதத் தொடங்கினார். இதன் மூலம் எம்.ஜி.ஆரின் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்தார்.

அருமருந்து
இயற்பெயர் இளவசரன் என்றிருக்க, தமிழ்மொழி மீது கொண்ட அளவற்ற பற்று காரணமாக தன்னை புலமைப்பித்தனாக மாற்றிக்கொண்டார். இளம்வயது முதலே திராவிட கழகம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து விலகிய போது அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அருமருந்தான வார்த்தைகளை கூறி தகுந்த ஆலோசனைகளை நல்கினார். இரவு பகலாக எம்.ஜி.ஆருடன் ஒரு வாரம் இருந்து அதிமுகவை தோற்றுவிப்பது குறித்து முக்கிய குறிப்புகளை வழங்கியுள்ளார்.

அரசவை கவிஞர்
அதிமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து புலமைப்பித்தனை அரசவை கவிஞராக, மேல் சபை உறுப்பினராக, துணை சபாநாயகராக நியமித்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். மேலும், அதிமுகவில் உயர்ந்த பதவியான அவைத்தலைவர் பதவியையும் புலமைப்பித்தன் அலங்கரித்திருக்கிறார். மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருந்தாலும், இவர் எழுதிய ''இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவினால் தொட்டிலை கட்டி வைத்தேன்'' என்ற பாடலை மட்டும் தான் எம்.ஜி.ஆர். அடிக்கடி இரவு நேரங்களில் கேட்டு கண் உறங்குவாராம். எம்.ஜி.ஆருக்கு தூக்கம் வராத இரவுகளெல்லாம் தனது பாடல் தான் தாலாட்டு பாடலாக அமைந்திருந்தது என புலமைப்பித்தனே பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

சிம்ம சொப்பனம்
இதனிடையே எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, கட்சி நிர்வாகிகளாக இருந்த பலரும் இன்று மாற்றுவழிகளில் சென்றுவிட்டனர். ஆனால் புலமைப்பித்தன் மட்டுமே எம்.ஜி.ஆர். மீது கொண்ட விசுவாசம், கட்சி கொள்கை மீது கொண்ட பற்று காரணமாக தொடர்ந்து அண்ணா திமுக கரைவேட்டியை இறுதி மூச்சு வரை அணிந்தவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் அளித்த பேட்டியில் கூட, சசிகலாவால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், முடிந்தால் தன்னை அதிமுகவிலிருந்து இ.பி.எஸ். நீக்கி பார்க்கட்டும் என சவால் விடுத்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications