சர்வர் டவுன்.. சடாரென சரிந்த வாட்ஸ்அப் சேவை! 90 நிமிடங்களுக்கும் மேலாக திணறிய பயனாளர்கள்
சென்னை: நேற்றிரவு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாட்ஸ்அப் சேவை 90 நிமிடங்களுக்கும் மேலாக முடங்கியுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்ய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாக வாட்ஸ்அப் விளக்கமளித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 278 கோடி வாட்ஸ்அப் பயனாளர்கள் இருக்கின்றனர். தகவல் பரிமாற்றத்திற்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் தற்போது ஆடியோ, வீடியோ, நீண்ட நேர வீடியோ, பணம் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. பயன்படுத்துவதற்கு எளியதாக இருப்பதால் பலர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் வாட்ஸ்அப் சர்வர் டவுன் காரணமாக அடிக்கடி இந்த செயலியை பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கிறது.

பொதுவாக இதுபோன்ற பிரச்னைகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் எதிர்கொள்வார்கள். ஆனால் இந்த முறை, பெல்ஜியம், பின்லாந்து, இஸ்ரேல், கென்யா மற்றும் இலங்கை போன்ற ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களும் எதிர்கொண்டுள்ளனர். ஏறத்தாழ 36 ஆயிரம் வாட்ஸ்அப் பயனாளர்கள் இது தொடர்பாக புகார் அளித்திருக்கின்றனர். இந்த பிரச்னை 90 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடித்ததாக சொல்லப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிர்வகித்து வருகிறது. ஏற்கெனவே மெட்டா நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இன்ஸ்டாகிரம் செயலி கடந்த மாதம் ஒரு சில மணிநேரங்கள் முடங்கியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. பொதுவாக இந்த செயலிகள் முடங்கும் போது அதற்கு மாற்றாக வேறு செயலிகளை மக்கள் பயன்படுத்துவது இயல்பு. தற்போது வாட்ஸ்அப் முடங்கியபோதும் இதேதான் நடந்திருக்கிறது.
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக டெலிகிராம் செயலியின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த பிரச்னை பெரியதாக வெடித்த நிலையில் இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கமளித்திருந்தது. அதாவது பிரச்னையை சரி செய்ய தங்கள் அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதாக கூறியுள்ளனர். 90 நிமிடங்களுக்கு பிறகு பிரச்னை தீர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டும் தங்களது வாட்ஸ்அப் செயலி செயல்படவில்லை என்று புகார் அளித்திருந்தனர்.
தொழில்நுட்ப உலகை பொறுத்தவரையில் ஒரேயொரு விதிதான் இருக்கிறது. நம்பகத்தன்மைதான் அந்த விதி. வாட்ஸ்அப் செயலியை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்கிற நம்பகத்தன்மையில்தான் இந்நிறுவனத்தின் மதிப்பு அடங்கியுள்ளது. அதுவே தற்போது சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படும்போது நிறுவனம் விரைவில் ஆட்டம் காணலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications