அருந்ததியர் தெலுங்கு வந்தேறிகள் என சீமான் விமர்சனம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
சீமானுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: அருந்ததியர் ஜாதியினரை வந்தேறிகள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்ததற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்த சீமான், அருந்ததியர் ஜாதியினரை தெலுங்கு வந்தேறிகள் என விமர்சனம் செய்தார். இது மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சில இடங்களில் மோதல்கள் வெடித்தன.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சீமான் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. மேலும் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் வெளியேறி ஆதித் தமிழர் அமைப்புகளில் இணைந்தனர்.
சென்னையில் அண்மையில் பல்வேறு தலித் அமைப்புகள் ஒன்று திரண்டு சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்தின. சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமும் முற்றுகையிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சீமானுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை: தலித் அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என சீமான் கூறியதற்கு கடும் கண்டனம். பாரதிய ஜனதா கட்சி பேசிவருகிற போலி இந்து தேசியத்தால், இந்து மதத்தை பின்பற்றுகிற உழைப்பாளி மக்கள் எள் முனையளவும் பயனடைந்துவிட முடியாது. அதேபோல் நாம் தமிழர் இயக்கம் பேசி வருகிற போலி தமிழ்த் தேசியத்தாலும் தமிழ்நாட்டு உழைப்பாளி மக்கள் பயனடைந்துவிட முடியாது. பாஜகவின் இந்து தேசியமும் நாம் தமிழரின் தமிழ்த் தேசியமும் போலியானது, அவை இரண்டும் கைகோர்த்து, உழைக்கும் மக்களை வஞ்சித்து வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சியின் அரசியலை தமிழ்நாட்டில் நிலைநிறுத்துவதற்கு முயன்று வரும் சீமானையும் நாம் தமிழர் இயக்கத்தையும் தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணித்திட வேண்டும். இவ்வாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications