சசிகலா ரிட்டன்ஸ்! தேனி அதிமுக நிர்வாகிகள் பரபர தீர்மானம்! பின்னணியில் ஓபிஎஸ்? அதிர்ச்சியில் எடப்பாடி
சென்னை: அதிமுக வரிசையாகத் தேர்தல்களில் தோல்வி அடைந்து வருவதால் தலைமை குறித்த கேள்வி மீண்டும் எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் முன்னிலையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. 21 நகராட்சிகளையும் அப்படியே பறிகொடுத்த அதிமுக, 138 நகராட்சிகளில் வெறும் மூன்றையும், 490 பேரூராட்சிகளில் 15ஐ மட்டுமே வென்றது.
அதிமுக தொண்டர்களுக்குக் கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் என எந்த தேர்தல் முடிவுகளும் உற்சாகத்தைத் தருவதாக அமையவில்லை.

மீண்டும் தலைமை
இந்த வரிசையில் இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் சேர்ந்துள்ளது. இதனால் ஒருங்கிணைந்த அதிமுக மற்றும் தலைமை ஆகியவை குறித்த பேச்சு அங்குக் கிளம்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்திலேயே சென்னை சைதாப்பேட்டை பகுதியில் எடப்பாடி பழனிசாமி, பதவி விலக வேண்டும் என்ற போஸ்டர்கள் தென்பட்டன. மறுபுறம் சசிகலாவைத் தலைமையில் அதிமுக செல்ல வேண்டும் எனக் கோரிக்கையும் எழுந்துள்ளது.

சசிகலா
சசிகலா சிறையில் இருந்து வெளியானது முதலே இதேபோன்ற கோரிக்கைகள் அதிமுகவில் எழுந்தே வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து கடந்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் ஆன பின்னர், அதிமுகவைக் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அமைதியானர். சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் அப்போதும் சசிகலா தலைமையில் அதிமுக செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலாவுன் பேசிய ஆடியோக்களும் கூட வெளியாகியது. இப்படியே சுமார் 100க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளிகி இருந்தது. அதிமுகவில் பலரும் சசிகலா தலைமை ஏற்கத் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது.

அதிமுக நிர்வாகிகள்
இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அதன் பின்னர் அதிமுகவில் எதுவும் மாறவில்லை. மாறாக சசிகலா உடன் பேசிய 100க்கும் மேற்பட்டோரைக் கட்சியில் இருந்து நீக்கியது அதிமுக தலைமை! இப்படிக் கடந்த காலங்களிலும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்துள்ளது என்றாலும் கூட இந்த முறை அந்த கோரிக்கை வலுவாகவே இருந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை நேரிலேயே சென்று சந்தித்தனர். மேலும், அப்போதே கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் தகவல் வெளியானது

ஆலோசனைக் கூட்டம்
இந்தச் சூழலில் தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்துள்ள நிகழ்வு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ,பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கைலாசபட்டியில் உள்ள பன்னை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது.

வலியுறுத்தல்
இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ,பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசும் போது அதிமுக படுதோல்வியைச் சந்தித்தற்கு முக்கிய காரணமாக இருந்தது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் என்றும் கட்சியை வலுப்படுத்தி அவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி கட்சியில் மீண்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் எனக் கட்சியினர் வலியுறுத்தினார்கள். மேலும், வரும் 5ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேனி அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேறப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சையது கான்
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தேனி மாவட்டச் செயலாளர் சையது கான், "அதிமுக எந்தக் காலத்திலும் தோற்றது இல்லை. கடந்த காலங்களிலும் நமக்குள் இருந்தே பிரச்சினைகளே தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் நடக்கும் சில துரதிஷ்டமான நிகழ்வுகளால் தான் கட்சி தோற்கும் நிலைக்கு வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் அதிமுக ஒரே கட்சியாக ஒன்றாக இருக்க வேண்டும்.

வெறும் தொடக்கம் தான்
அப்படி ஒருங்கிணைந்து அதிமுக இருக்கும்போது யாராலும் அதிமுகவைத் தோற்கடிக்க முடியாது என்ற முடிவுக்குத் தொண்டர்களும் நிர்வாகிகளும் வந்துள்ளனர். தொண்டர்களின் கோரிக்கையை ஓபிஎஸ் இடம் சொல்லியுள்ளோம். இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழகம் முழுவதும் தொடரும். இது வெறும் தொடக்கம் மட்டும் தான். கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் இணைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

ஏன் முக்கியம்
கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற அனைவரும் என்று கூறப்பட்டாலும் கூட இந்தத் தீர்மானம் சசிகலா மற்றும் தினகரனை குறி வைத்தே போடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்தில் ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாகவே கூறப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் கட்சியில் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஓபிஎஸ் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த காட்சிகளில் அடுத்து தமிழக அரசியலில் நடக்கும் சம்பவங்களின் டிரைலர் தான் என்கிறார் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications