ரிசல்ட் பூரிப்பில் முதல்வர்! டெல்லி சென்ற பிடிஆர்.. 110 விதியின் கீழ் 2 அறிவிப்புகள் வெயிட்டிங்?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மார்ச் மாதம் நடைபெறும் தமிழக பட்ஜெட்டில் 110 விதியின் கீழ் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற தேர்தல் என ஹாட் டிரிக் வெற்றியை பெற்றுள்ள திமுக. இந்த தேர்தலில் அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் கோவையை திமுக தன்வசப்படுத்தியதால் முதல்வர் ஸ்டாலின் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
இந்த நிலையில் அடுத்த மாதம் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் தாக்கலாகிறது. இதற்காக இப்போதிலிருந்தே கோப்புகள் தயார் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியால் பூரிப்பில் உள்ள திமுக பட்ஜெட்டின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்று அனைவரும் எதிர்பார்க்கும் ரூ 1000 உரிமைத் தொகை. இந்த தொகையை திமுக அரசு தேர்தல் அறிக்கையில் சொல்லியது போல் தரவில்லை என எதிர்க்கட்சிகள் வாதம் செய்கின்றன.

5 ஆண்டு கால ஆட்சி
ஆனால் திமுக அரசோ 5 ஆண்டு கால ஆட்சியின் செயல்வடிவமே திமுக தேர்தல் அறிக்கை. அதனால் இன்னும் 4 ஆண்டுகளில் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என்கிறார்கள். இந்த நிலையில் ரூ 1000 உரிமை தொகை வரும் தமிழக பட்ஜெட்டின் போது 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தேர்தல் முடிந்தது
அது போல் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மற்றொரு புதிய அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிகிறது. தேர்தல் முடிந்தவுடன் இரு தினங்களில் முக்கிய அறிவிப்பு என செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையான கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி சலுகையை அனைவருக்கும் கொடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

5 சவரன் நகை
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 48 லட்சமாகும். அதில் 35 லட்சம் பேர் நகைக் கடன்கள் பெற தகுதியற்றவர்கள் என கூட்டுறவுத் துறை தெரிவித்திருந்தது. மீதமுள்ள 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்ப கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

40 கிராமுக்கு மேல் நகை வைத்துள்ளவர்கள்
மேலும் 40 கிராமுக்கு மேல் வைத்தவர்களுக்கு தள்ளுபடி சலுகை கிடையாது. ஆதார் எண்ணை தவறாக கொடுத்தவர்கள், குடும்ப அட்டையை கொடுக்க தவறியவர்கள் ஆகியோருக்கும் தள்ளுபடி கிடையாது. வெள்ளை நிற குடும்ப அட்டை வைத்திருந்தவர்கள் மற்றும் உரிய காலத்தில் நகைக் கடன் திருப்பி செலுத்தியவர்களுக்கு இந்த சலுகை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

35 லட்சம் பேருக்கு நகைக் கடன்
இந்த நிலையில் மீதமுள்ள 35 லட்சம் பேருக்கும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட்டின் போது 110 இன் கீழ் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கொடுக்குமாறு வலியுறுத்த இன்றைய தினம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றுள்ளார். எனவே இந்த நிதி கிடைக்கப்பெற்றால் ரூ 1000 உரிமைத் தொகையும் 35 லட்சம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. டெல்லி சென்ற பிடிஆர் , காஙகிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.












Click it and Unblock the Notifications