நான் எத்தனை பேரை பார்த்திருக்கேன்.. திமுக காணாமல் போகும் என்றவர்கள் இப்போது இல்லை.. கனிமொழி அட்டாக்
சென்னை: திமுக காணாமல் போகும் என்று சொன்னவர்கள் எத்தனை பேரை நான் பார்த்திருக்கிறேன் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். திமுக காணாமல் போகும் என்று சொன்னவர்கள் இப்போது இல்லை ஆனால் திமுக இருக்கிறது என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கனிமொழி எம்.பி பங்கேற்றார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கனிமொழி.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் தலைவர் கலைஞர் அவர்களின் கனவு நனவாகியுள்ளது!
தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள் - அதிகாரிகள் சந்திப்பு என பத்து ஆண்டுகால நம் விடாமுயற்சியால் இன்று அடிக்கல் நாட்டப்படும் இத்திட்டம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 நாட்களாகவே திமுக, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். வாரிசு அரசியல், குடும்ப அரசியல், கொள்ளைக்கூட்டம், கபடதாரிகள் என்றெல்லாம் பேசினார்.
திருநெல்வேலியில் இன்று பேசிய மோடி, தமிழ்நாட்டில் இருந்தே திமுக காணாமல் போகும் என்று கூறிய மோடி, மூன்றாவது முறையாக தனது தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி என்று கூறினார்.
மோடியின் பேச்சு குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி. எத்தனை பேரை நான் பாத்திருக்கிறேன். திமுக காணாமல் போகும் என்று சொன்னவர்கள்தான் இப்போது இல்லை என்று தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு பெயர் வைக்கவில்லை. யார் திட்டங்களுக்கு யார் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications