நேற்று அவருக்கு; இன்னிக்கு இவருக்கு.. ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம்..குழப்பத்தில் அதிமுக
சென்னை: ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டி வருவதால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகே அ.தி.மு.க.வில் லேசான சலசலப்பு உருவாகத் தொடங்கியது.
அப்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நடந்து வந்ததால் உள்கட்சி சலசலப்பு வெளியே தெரியவில்லை. பூதாகரமாக வெடிக்கவில்லை.

அ.தி.மு.க.வில் குழப்பம்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியை பறிகொடுத்த நிலையில் இந்த விவகாரம் பூதாகாரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. முதல் பிரச்சினையே எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்வு செய்வது என்பதுதான். இதற்காக நடந்த முதல் கூட்டமே எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.' முதல்வர் பதவியை விட்டு கொடுத்து இருக்கிறேன் ஆகையால் நான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன்' என்று ஓ.பன்னீர் செல்வம் மல்லுக்கட்டினார்.

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் மல்லுக்கட்டு
'கொங்கு மண்டலத்தில் இத்தனை சீட் வெற்றி பெற செய்து கொடுத்துள்ளேன்' என்று எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதம் பிடிக்க கூட்டம் பாதியிலேயே முடிந்தது. அதன்பின்னர் வேறு நாள் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்ட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு விருப்பம் இல்லாமல் ஓ.பி.எஸ் பாதியில் எழுந்து சென்று விட்டதாக தெரிகிறது.

சசிகலா குடைச்சல்
அதன்பிறகு நடந்த சம்பவம் எல்லாம் வேற லெவல். ஆட்சியில் இருந்தபோது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் சேர்ந்து அறிக்கை விட்டு வந்த நிலையில் தற்போது திமுக அரசை அவ்வப்போது பாராட்டி ஓ.பி.எஸ் தனியாக அறிக்கை விட்டு வருகிறார். அதே வேளையில் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ் திமுக அரசை குற்றம்சாட்டி அறிக்கை விட்டு வருகிறார். இருவருக்கும் இடையே உள்ள தகராறு அப்பட்டமாக வெளியே தெரிந்த நிலையில் சசிகலா வேறு மீண்டும் அ.தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

ஓ.பி.எஸ்-க்கு விருப்பம் இல்லை
மீண்டும் அ.தி.மு.க.வை கைப்பற்ற வேண்டும், தலைவராக அமர வேண்டும் என்று சசிகலா தொண்டர்களிடம் பேசும் ஆடியோ அடிக்கடி வெளியாகி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட போதிலும் எதிர்க்கட்சி துணை தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கான கூட்டம் ஜூன் 14-ம் தேதி நடக்கிறது. ஆனால் துணை தலைவர் பதவியில் அமர ஓ.பி.எஸ்-க்கு விருப்பம் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் கூட ஓ.பி.எஸ் பங்கேற்கவில்லை.

போஸ்டர்களால் பரபரப்பு
அதன்பிறகு ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து சமாதானம் பேசினார் இ.பி.எஸ். இவ்வாறு பெரிய தலைகளே மோதிக் கொண்டிருக்கும் போது இவரது ஆதரவாளர்கள் சும்மா இருப்பார்களா? இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பல இடங்களில் தற்போது போஸ்டர் யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். நேற்று நெல்லை வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதியில் மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் சார்பில் இ.பி.எஸ்-க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்
அதிமுக கட்சி செயல்பாடுகளில் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் நடவடிக்கை, ஆலோசனை செய்ததால்தான் தேர்தலில் தோற்றுப் போனோம். என்று ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர் பரபரப்பை கிளப்பியது.

இன்று இ.பி.எஸ் ஆதரவாளர்கள்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று இ.பி.எஸ் ஆதரவாளர்கள் நெல்லை மாநகர பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். ''எடப்பாடி பழனிசாமி அவர்களை தமிழக சட்டப்பேரவை தலைவராக தேந்தெடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி'' என்று அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமை தள்ளாடி வரும் நிலையில் தொண்டர்களின் போஸ்டர் யுத்தம் கூடுதலாக கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications