விடை தெரியாத கேள்வியாக மேம்பாலம்.. சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாவும், அடிக்கடி இரயில்வே கேட் மூடப்படுவதாலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரத்திற்கு அந்த சாலையில் வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக செல்கின்றன.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் என்ற இடத்தில் தான் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் பெருங்களத்தூரில் எப்படி இருந்ததோ, அந்த அளவிற்கு இப்போது சிங்கப்பெருமாள் கோவில் இருக்கிறது. காரணம்.. ரயில்வே கேட்.. பெருங்களத்தூர் பகுதியை எப்படி ரயில்வே கேட் பாடாய் படுத்தியதோ, அதே பிரச்சனை தான் இப்போது சிங்கப்பெருமாள் கோவில் பகுதி மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

சென்னை அசுர வளர்ச்சி அடைந்தததால் புறநகர் பகுதிகளும் மின்னல் வேகத்தில் வளர்ந்தன. சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தான் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. குறிப்பாக சொல்வது என்றால், சிங்கப்பெருமாள் கோவில் - ஒரகடம் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், சிங்கப்பெருமாள் கோவில், ஜிஎஸ்டி சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார் மார்க்கத்தில், ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. ஜிஎஸ்டி சாலையில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட்டை கடந்து தான், ஸ்ரீபெரும்புதுார், பாலுார் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட், ஒரு நாளைக்கு, 30 முறைக்கு மேல் மூடப்படுவதால் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதன் விளைவாக ஜிஎஸ்டி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது. இதனைத் தவிர்க்க, சிங்கப்பெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையை இணைக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் கட்ட 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவு செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு காலக்கட்த்தில் இந்த மேம்பாலத்தைக் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் நில எடுப்பு, ரயில்வே துறை, மத்திய நெடுஞ்சாலைத் துறைகளிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட காரணங்களால் மேம்பாலப்பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.
எனினும் கடந்த 2021 நவம்பரில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமையில், பாலம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. தொடர்ந்து, 138.27 கோடி ரூபாயில் பணிகள் தொடங்கியது.பணிகள் துவங்கிய 30 மாதங்களுக்குள் மொத்த பணிகளும் முடிக்க வேண்டும் என, கால நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. ஆனால் துவக்கத்தில் வேகமாக நடைபெற்று வந்த பணிகள், தற்போது மந்தகதியில் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சாலையை கடப்பதற்க்கும், ரயில்வே கேட்டை கடப்பதற்கும் தைலாவரம் முதல் காட்டாங்குளத்தூா், சாமியாா் கேட், பேரமனூா், மஹிந்திரா சிட்டி போன்ற பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் பொதுமக்கள் வரவேண்டிய நிலை இருக்கிறது. அரை மணி நேரத்துக்கும் குறைவாக இந்த பகுதிகளில் உள்ள ரயில்வே கேட் அடைக்கப்படுவதால், அனைவரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
பொதுமக்கள் பயன்பாட்டை கருதி சாலையை கடப்பதற்கு அந்த ரயில்வே கேட்டை அப்புறப்படுத்தி மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைத்து பொது மக்களுக்கு வழி அமைத்து தர வேண்டும் என்றும், பொதுமக்கள் ஜிஎஸ்டி சாலையை கடப்பதற்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் சிங்கப்பெருமாள் ரயில்வே நிலையம் அருகில் நகரும் படிக்கட்டு அமைப்பதற்கும், ஜிஎஸ்டி சாலையை கடப்பதற்கும், 8 வழி சாலையாக மாறிய பின்பு விபத்துகளை தவிா்க்கவும், சிக்னல் தானியங்கி முறையில் இயங்குமாறு அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த சூழலில் சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலப் பணிகள் காரணமாகவும், அடிக்கடி இரயில்வே கேட் மூடப்படுவதாலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் அணிவகுத்து வாகனங்கள் செல்கின்றன.












Click it and Unblock the Notifications