முத்துக்கு முத்தாக..அதிமுகவில் சகோதர கீதம்! பன்னீர்செல்வத்துக்கு பச்சைக் கொடி? எடப்பாடி தான் அப்செட்
சென்னை: அதிமுகவை பழைய நிலை போல பலம் பொருந்திய கட்சியாக உருவாக்க வேண்டும் என்றால் பிரிந்து சென்ற நிர்வாகிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற குரல் அதிமுகவில் எழுந்திருக்கிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க வேண்டுமென கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமிக்கு சில முன்னாள் அமைச்சர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சேர்ந்தே இருப்பது அதிமுகவும் சண்டை சச்சரவுகளும் என்பது போல் தான் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கட்சி பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது.

ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கு ஒன்று காரணமாக அவர் சிறை செல்ல நேர்ந்தது. இதனையடுத்து கூவத்தூர் ரிசார்ட்டில் சில சர்ச்சையான நிகழ்வுகளுக்குப் பிறகு அதிமுகவின் அடுத்த முதலமைச்சர் உருவானார்.
சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு பிறகு பல மாற்றங்கள் அதிமுகவில் ஏற்பட்டது.குறிப்பாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என அப்போதைக்கு தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி உடன் கைகோர்த்தார். அதற்கு பிறகு நான்கு ஆண்டுகள் ஆட்சி தொடர்ந்த நிலையில் துணை முதலமைச்சராகவும் அவர் இருந்தார். 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் பிரச்சனைகள் எழத் தொடங்கியது.
தொடர்ந்து கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார், ஆனாலும் அவருக்கு கட்சிக்குள்ளேயே நெருக்கடி இருப்பதாகவே கூறப்படுகிறது. அவர் தலைமையேற்ற 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது விக்கிரவாண்டி தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் எழுந்திருக்கின்றன.
குறிப்பாக கடந்த சில நாட்களாகவே அந்த கோஷம் பலமாகி வருகிறது. அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என சில மூத்த நிர்வாகிகள் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த முழக்கம் எடப்பாடி வீட்டு ஆலோசனைக் கூட்டத்திலேயே எழுந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் சில மூத்த முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்ப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் தான் இருக்கிறேன் என கூறி வருகிறார். மேலும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என ஆரம்பித்து பாஜகவுடன் இணக்கம் காட்டி வருகிறார். மேலும் பல தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராகவே போட்டியிட்டு வாக்கு வங்கியையும் பிரித்து வருகிறார். பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், அதிமுக வேட்பாளர்கள் தோல்விக்கு ஓபிஎஸ் காரணம் என சீனியர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சிகள் சேர்த்துக் கொண்டால் அதிமுக பிளவு பட்டுள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நீர்த்துப்போக செய்ய முடியும். மேலும் பன்னீர்செல்வம் தனியாக இருப்பதால் அவரை பாஜக பயன்படுத்தி வருகிறது. அதிமுகவில் அவரை சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினையையும் தீர்த்துவிடலாம் என்கின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை மிகக் கடுமையாக விமர்சித்த சில மூத்த முன்னாள் அமைச்சர்களே அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சு எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு பெரிய பதவிகள் எதுவும் வழங்கத் தேவையில்லை, கட்சியில் சேர்த்துக் கொண்டாலே போதும் என ஓ.பன்னீர்செல்வம் இறங்கி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தங்கள் ஆதரவாளர்கள் பலமாக இருப்பதால் அங்கு மட்டும் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என மறைமுக தூது விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே பன்னீர்செல்வம் மீண்டும் கட்சிக்குள் வரலாம் என்ற பேச்சு அடிப்பட தொடங்கி இருக்கிறது. ஆனால் கடந்த கால நிகழ்வுகளை நினைத்துப் பார்த்த எடப்பாடி பழனிச்சாமி அதற்கு உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே கடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய மூவரை தவிர யாரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்க தயார் எனக் கூறியிருக்கின்றார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியை சமாதானம் செய்யும் முயற்சியில் சில சீனியர் முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications