கேரளா மாநிலம் தர முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வாங்காதது ஏன்.? துரைமுருகன் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், கேரள அரசு அளிக்க முன்வந்த தண்ணீரை தமிழக அரசு வேண்டாம் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. சுமார் 14 மாவட்டங்கள் கேரள மாநிலத்தில் வென்னத்தால் கடும் பாதிப்பை சந்தித்தன. அப்போது தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்தவர்களுக்கு பெருமளவில் உதவிகள் குவிந்தன
இந்நிலையில் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது இதனை பார்த்த அண்டை மாநிலமான கேரளா குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப தயாராக உள்ளதாக கூறியுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் மூலமாக தூய்மையான முறையில் சுத்திகரிப்பு செய்த தண்ணீரை சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் கூறியது
சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD. தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும், தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என தமிழக அரசு கூறிவிட்டது
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள துரைமுருகன் தண்ணீர் தருவதாக கேரள அரசு கூறியதை, தமிழக அரசு வரவேற்றிருக்க வேண்டும். கேரள அரசு தருவதற்காக முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தமிழக அரசு பெற்றுக் கொள்ளாதது ஏன் என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட வரலாறும் உண்டு என நினைவு கூர்ந்தார்.
அதே போல மத்திய அரசிடமிருந்து வறட்சி நிதியை வலியுறுத்தி தமிழக அரசு பெற்றிருக்க வேண்டும் என்றார். ஆந்திர மாநிலத்திடமிருந்து உரிய தண்ணீரை பெற தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வினவியுள்ளார்.
தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அண்டை மாநில அரசுடன் தமிழக பொதுப்பணித்துறை பேசி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மழையில்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. ஆதலால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்வதற்கு, ஒரு அரசு தேவையில்லை. ஊடகங்களும், மக்களுமே இதை தான் சொல்கிறார்கள்.
இதையே திரும்ப சொல்வதற்காகவா தமிழக அரசு உள்ளது என கேள்வி எழுப்பினார். விரைவில் கூட உள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது குடிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க திமுக நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறினார்












Click it and Unblock the Notifications