ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு குடிமராத்து பணிகள் கண்காணிக்கப்படுகிறது.. பேரவையில் முதல்வர் தகவல்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என, முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, பொதுப்பணித்துறை மேற்கொள்ளக் கூடிய பணிகளின் தரத்தை சோதனை செய்ய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.பொதுப்பணித்துறையில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனில் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்
பேரவையில் எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனின் கேள்விகளுக்கு பதிலளித்து தொடர்ந்து பேசிய முதல்வர், கிராமப்புற விவசாயிகள் மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் எந்த சிபாரிசும், முறைகேடும் நடைபெறவில்லை.
ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு இத்திட்டப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ் தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன.
இந்த 39 ஆயிரம் ஏரிகளில் கடந்த 2016-17ம் ஆண்டில் 1,513 ஏரிகள் தூர்வார திட்டமிடப்பட்டு, இவற்றில் பெரும்பாலான ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
2017-18ம் ஆண்டில் 1,511 ஏரிகளை ரூ.328 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டு, சுமார் 1,406 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தற்போது 2019-20-ம் ஆண்டுகளில் 1,829 ஏரிகளை ரூ.498 கோடியில் தூர்வாரும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது என முதல்வர் பழனிசாமி தகவல்களை தெரிவித்துள்ளார்.