தமிழ்நாட்டில் 3-வது அணியா? பாஜக ஒரு பொருட்டே கிடையாது.. இங்கே திமுக, அதிமுகதான்.. திருமாவளவன் பரபர
சென்னை: தமிழகத்தில் மூன்றாவது அணி அமையாது. பாஜக ஒரு பொருட்டே கிடையாது. இங்கே திமுக, அதிமுகதான் முக்கியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. திமுக தனது தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையினை தொடங்கியுள்ளது. அதேபோல், அதிமுகவும் தேர்தல் பணியை தொடங்கியது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் ஜெயலலிதா பாணியில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலமா என்பது குறித்தும் எடப்பாடி ஆலோசிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இதனால் பாஜக தலைமையில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மூன்றாவது அணி அமையாது. பாஜக ஒரு பொருட்டே கிடையாது. இங்கே திமுக, அதிமுகதான் முக்கியம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொல். திருமாவளவன் மேலும் கூறியதாவது:-
நிதிஷ் குமார் தான் வருத்தப்படுவார்: நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து விரட்ட வேண்டுமென்று விசிக வலியுறுத்துகிறது. நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது அவருக்குதான் நட்டமாக அமையும். அவர் சில அண்டுகள் முதல்வராக மேலும் தொடர்வதற்காக ஒரு வரலாற்று பிழையை செய்து இருக்கிறார்.
தேர்தலுக்கு பின்னர் நிதிஷ் குமார் மிகவும் வருத்தப்படும் நிலை ஏற்படும் என நம்புகிறேன். நிதிஷ் குமார் இல்லாவிட்டாலும் கூட இந்தியா கூட்டணி இந்த தேர்தலை கம்பீரமாக சந்திக்கும் சனாதன சக்திகளை வீழ்த்தும். இந்தியா கூட்டணியை விட்டு வெளியே வருவோம் என்று மம்தாவும் சொல்லவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலும் சொல்லவில்லை.
தேர்தலுக்கே வாய்ப்பு இருக்காது: அங்குள்ள நிலவரத்தின் அடிப்படையில் காங்கிரஸ்க்கு போதுமான இடங்களை ஒதுக்கமுடியாத நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா அறிவித்து இருக்கிறார். இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா வெளியேறவில்லை. ஆம் ஆத்மியும் பஞ்சாபில்தான் தனித்து போட்டி என்று சொல்லியிருக்கிறதே தவிர டெல்லி, ராஜஸ்தான் என வெளி மாநிலங்களில் அப்படி சொல்லவில்லை.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் தொடர்கிறது. பஞ்சாபில் சில முரண் என்றுதான் இதை புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தலுக்கே வாய்ப்பு இருக்காது என்று கார்கே சொல்வது உண்மைதான். பாஜக ஒரே நாடு ஒரே கலாசாரம் என்று சொல்வது போல ஒரே கட்சி ஒரே ஆட்சி என்கிற முழக்கத்தை முன்வைத்து இருக்கிறது. அவர்கள் காங்கிரஸ் இடதுசாரிகள் இல்லாத பாரதம் என்றுதான் தொடர்ந்து முழங்கி வருகிறார்கள்.
பாஷிச காட்டாட்சி: இது எல்லாம் ஜனநாயகத்திற்குஎதிரான பாஷிச போக்கு. பாஜக தேர்தலையே எதிர்கொள்ளாமல் நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றாக அழித்து ஒழிக்க துடிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெரிய கனவு திட்டம் உள்ளது. மீண்டும் அந்த கனவு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவில்தான் ஒரு பாஷிச காட்டாட்சியை நடத்த வாய்ப்பு உள்ளது. அந்த அச்சுறுத்தலில் இருந்துதான் இந்தியா கூட்டணி உருவாகியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications