11 பெண் மேயர்கள்.. பட்டதாரிகள், இல்லத்தரசிகள், இன்சினியர்கள்! மாநகராட்சிகளை ஆளப்போகும் மகளிர் படை
சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 பெண் மேயர்கள் இன்று பொறுப்பேற்று உள்ளார்கள்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 2.83 கோடி பேர் வாக்களித்தனர்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் 2016-க்குப் பிறகு தற்போது தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக கோயமுத்தூர் மாநகராட்சி இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது. தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த மாநகராட்சியின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 21 ஆக அதிகரித்தது.

வெற்றி
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடத்திலும் திமுக வெற்றியை பதிவு செய்தது. தமிழகத்தில் உள்ள 21 மாநாகராட்சிகளையுமே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கைப்பற்றி உள்ளன.

பெண்கள்
தமிழகத்தில் 21 மாநகராட்சி மேயர்களில் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 11 பெண் மேயர்களும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். சென்னை, தாம்பரம், ஈரோடு, கோவை என பல்வேறு இடங்களில் பெண் மேயர்கள் பொறுப்பேற்றனர்.

சென்னை
சென்னை மாநகராட்சியில் 74-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் பிரியா(28) மேயராக பதவியேற்றுள்ளார். சென்னை மாநகராட்சியின் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் மேயர் இவர். அதேநேரம் சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயரும் ஆவார். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் பிரியா.

தாம்பரம்
தாம்பரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுக வேட்பாளர் வசந்தகுமாரி பொறுப்பேற்றுள்ளார். வசந்தகுமாரி(25) பிடெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். இவர் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பம் கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து மேயராக பொறுப்பேற்றார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுக கவுன்சிலர் மகாலட்சுமி யுவராஜ் தேர்வாகி இருக்கிறார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தவர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் முதல் மேயராக பொறுப்பேற்றுள்ளார் திமுக கவுன்சிலர் சங்கீதா. சிவகாசியை குட்டி ஜப்பானாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

திமுக கவுன்சிலர்கள்
திண்டுக்கல் மாநகராட்சி மேயராக இளமதியும், கரூர் மாநகராட்சி மேயராக கவிதா, வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா அனந்தகுமார், கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் கல்பனா, கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி, மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி, ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினமும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications