அந்த 6 பேருக்கும் நன்றி.. 233 ஆவது முறை மகிழ்ச்சியான தோல்வி.. தேர்தல் மன்னன் பத்மராஜன் ஜாலி பேச்சு
ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் தனக்கு வாக்களித்த 6 பேருக்கு நன்றி என கூறியுள்ளார் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன்.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பத்மராஜன் ஒரு 6 பேருக்கு நன்றி சொல்லியுள்ளார். மேலும் அவர் இந்த முறையுடன் சேர்த்து 233 ஆவது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், தேமுதிக என 4 முனை போட்டி இருந்தது.
அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமல்லாது 73 சுயேச்சைகளும் போட்டியிட்டனர். அவர்களில் முக்கியமானவர் பிரபலமானவர் பத்மராஜன்.

233 ஆவது முறை
இவர் இந்த முறை 233 ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டார். ஒவ்வொரு முறையும் தமிழகம் மட்டும் இல்லாமல் தேசிய அளவில் தேர்தல்களில் போட்டியிட்டவர் பத்மராஜன். இவர் முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், காங்கிரஸ் எம்பி ராகுல் உள்ளிட்டோரையும் எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர்
தமிழகத்தை பொருத்தமட்டில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிட்டுள்ளார். 1988 ஆம் ஆண்டு முதல் 32 எம்பி தேர்தல்கள், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டசபை தேர்தல்களில் பத்மராஜன் போட்டியிட்டுள்ளார். இது மட்டுமில்லை கர்நாடக தேர்தல், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல்களையும் விட்டுவைக்கவில்லை.

தோல்வி
ஒரு முறை கூட வெற்றி பெற கூடாது. தோல்வியை மட்டுமே சந்திக்க வேண்டும் என்பதையே வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளார். இதுகுறித்து பத்மராஜன் கூறுகையில் சாதாரண குடிமகனும் தேர்தலை சந்திக்கலாம் என்பதற்கு உதாரணமாக நான் இருக்க வேண்டும். மூன்றரை வயதில் என் மகனை வேட்புமனுதாக்கல் செய்ய வைத்து உலக சாதனை படைத்தேன். இதுவரை யாருமே அப்படி செய்ததில்லை.

6 பேருக்கு நன்றி
நேற்று ஈரோடு கிழக்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எனக்கு தளராமல் வாக்களித்த அந்த 6 பேருக்கு நன்றி. 22 ஆவது தோல்வி மகிழ்ச்சியான தோல்வி என்றும் பத்மராஜன் தெரிவித்தார். இவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர். டயர் பஞ்சர் ஒட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேர்தலுக்காக அவர் இதுவரை ரூ 1 கோடி வரை செலவு செய்துள்ளார். இவர் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல்முறையாக மேட்டூர் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். இவர் விழிப்புணர்வுக்காகவே போட்டியிடுகிறார். மேலும் இவர் நிறைய தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications