விசிகவில் 100 மாவட்டச் செயலாளர்கள்! 20% பெண்கள் 25% இளைஞர்கள்! திருமாவளவன் போடும் புது பிளான்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாக வசதிக்காக 100 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடிவு செய்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.
தமிழகத்தில் 38 வருவாய் மாவட்டங்கள் உள்ள நிலையில் அதனை 100-ஆக பிரித்து பொறுப்பாளர்களை களமிறக்கவுள்ளார் திருமா.
100 மாவட்டச் செயலாளர்களில் 20% பெண்களுக்கும் 25% இளைஞர்களுக்கும் 10% பட்டியலினத்தை சேராதவர்களுக்கும் கொடுக்கவுள்ளார் திருமாவளவன்.

விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அமைப்பு ரீதியாக சில அதிரடி மாற்றங்களை அரங்கேற்றவுள்ளார் திருமாவளவன். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை 10 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தி அதில் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலை பெற்றிருக்கிறார். தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற வீதம் 100 மாவட்டச் செயலாளர்களை கட்சியின் நிர்வாக வசதிக்காக நியமிக்க முடிவெடுத்துள்ளார் திருமா.

பொது பிம்பம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றாலே அது தலித் மக்களுக்கான கட்சி என்கிற பிம்பத்தை மாற்றும் வகையில், தலித் அல்லாதோர் 10% பேருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு தரவுள்ளார். இதேபோல் தமிழத்தில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒன்றையும் அவர் செய்யவுள்ளார். அதாவது மாவட்டச் செயலாளர் பதவியிடங்களில் 20% பெண்களுக்கு ஒதுக்க முடிவெடுத்துள்ளார். இதேபோல் ஆற்றல் மிகு இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்கள் வசம் 25% பேருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கவுள்ளார்.

எப்போது மாற்றம்
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள திருமாவளவனின் மணிவிழா முடிந்த பிறகு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காலத்திற்கு ஏற்றார் போல் கட்சியின் கட்டமைப்புகளை மாற்ற வேண்டியது ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவருக்கும் கடமையாகும். இன்னும் பழைய கால அரசியலே செய்து வந்தால் அது புதிய தலைமுறைகள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற உண்மையை உணர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உயர்நிலைக் குழு
மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விசிக உயர்நிலைக் குழுவில் இது தொடர்வாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு அனைவரது ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டதாம். இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கணிசமான அளவில் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்க திருமாவளவன் முன்வந்திருப்பது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்திருக்கிறது.












Click it and Unblock the Notifications