"இது சமூக நீதி அரசுக்கு அழகல்ல".. நேரடியாக அட்டாக் செய்த திருமாவளவன்..பொளேர் பேட்டி
சென்னை : வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை, நேரடியாக அட்டாக் செய்து திருமாளவன் விமர்சித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது கூறுகையில், வேங்கை வயல் பிரச்சனையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். காலம் தாழ்த்தக்கூடாது. அது சமூக நீதி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

பஞ்சமி நிலத்தை கண்டறிவதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் நீதியரசர் மருதமுத்து தலைமையிலான ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். குறிப்பாக விழுப்புரம் தென்ஆற்காடு மாவட்டங்களில் உள்ள இருளர் மற்றும் குறவர் சமூகத்தினர் மீது திருட்டு வழக்குகள் மற்றும் வழக்குகளை, பொய் வழக்குகளை புனைவது வாடிக்கையாக உள்ளது. எனவே அவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது" என திருமாவளவன் வலியுறுத்தினார்.
முன்னதாக சென்னை ராமாபுரத்தில் நேற்று இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதை எங்கள் கட்சி (விசிக) வரவேற்கிறது. இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிராகரிக்க முடியாது. காலம் தாழ்த்த முடியாது என்பதால் ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார். இது தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். ஆளுநர் அவரின் பதவியை, பொறுப்பை மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டரைப் போல பேசியும் செயல்பட்டும் வருவதுடன், பொது நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுகிறார். அத்துடன் ஆளுநர் சனாதானக் கொள்கைகளை உயர்த்தியும் பேசுகிறார்.
ஆளுநரின் இந்த அணுகுமுறைகளை கண்டித்து, வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம், ஆளுநர் மாளிகை முன்பு நடக்க உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும். மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து திரும்பப் பெற வலியுறுத்த போகிறோம்.

ஆளும் கட்சி எப்படி செயல்பட வேண்டுமோ அப்படித்தான் திமுக செயல்பட்டது, சட்ட வரையறைகளின்படியே பிரதமரை வரவேற்கும் முறையில் திமுக நடந்து கொண்டது.. அதே நேரத்தில் ஆளுநர் மற்றும் பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத போக்கினை மிக வெளிப்படையாகவும், வரம்பு மீறாமலும் திமுக கண்டித்துள்து. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவை வீழ்த்துவதே லட்சியம் என உறுதிப்பட கூறியிருக்கிறார். எனவே பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவிவிட்டது என்று சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை என திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications