இதுதான் சரியான நாள்.. மத்திய அரசின் உறவை ஆராய ஆணையம்.. திருமா சொன்ன முக்கிய பாயிண்ட்! என்ன சங்கதி?
சென்னை: மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளாக நவம்பர் மாதம் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்நாளில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்குமான பஞ்சாயத்துகள் கூர்மையடைந்திருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு முதல் மத்திய-மாநில அரசின் உறவில் பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மாநில உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராததோடு மாநில நிர்வாகத்தையே முடக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவதால் இப்போது தமிழ்நாடு அரசு அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளை அதிகாரமற்றவையாக ஆக்குவதன்மூலம் 'ஒரே நாடு ஒரே ஆட்சி' என ஆக்குவதற்கு ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது.
இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்-11இல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டதற்கு மாறாக அப்போதிருந்த இந்திய ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. அதற்கு எதிரான குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கின. அதனால் மத்திய- மாநில உறவுகளை ஆய்வுசெய்வதற்காக நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை (1966) ஒன்றிய அரசு அமைத்தது. அந்த ஆணையமும் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் மன நிறைவுகொள்ளாத அன்றைய தமிழ்நாடு அரசு 1969 ஆம் ஆண்டு நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம் இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அனந்தபூர் சாகிப் தீர்மானத்தை (1973) இயற்றவும்; மேற்குவங்கத்தை ஆட்சி செய்துவந்த இடதுசாரி அரசாங்கம் மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவும் (1977) அதுவே தூண்டுகோலாக அமைந்தது. அவற்றின் காரணமாக மத்திய - மாநில உறவுகளை ஆராய 1983 ஆம் ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையமும் 2007 ஆம் ஆண்டு நீதிபதி பூஞ்ச்சி ஆணையமும் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டன. அவற்றின் பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் உள்ளன.
தற்போதைய ஒன்றிய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கை இதுவரை அமைதி காத்து வந்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மாநில உரிமைகள் குறித்த புரிதலை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.
மத்திய - மாநில உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் புதிய பரிமாணங்களை அடையாளம் காணவும், மாநிலங்களின் அதிகாரங்களை மீட்டெடுக்கவுமான பரிந்துரைகளைச் செய்வதற்கு 1969 இல் இராஜமன்னார் குழு அமைக்கப்பட்டதுபோல் தற்போதும் குழு ஒன்றை அமைத்திட தமிழக அரசு முன்வரவேண்டும் என முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications