விசிக யாருக்கும் அடிமை கிடையாது.. திருமாவளவன் துணை முதல்வராவது உறுதி.. சூசகமாக சொன்ன விசிக நிர்வாகி!
திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சராவது உறுதி என்று அக்கட்சியின் அமைச்சர் செயலாளர் கோவேந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் களம் அடுத்த 6 மாதத்தில் மாறும் என்று கூறிய அவர், விசிக நிர்வாகிகள் யாருக்கும் அடிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்தார். அவரின் அந்த பேச்சு தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் கூட்டணிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறி வந்தனர்.

குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள விசிக தரப்பில் பல்வேறு நிர்வாகிகளும் வலியுறுத்தினர். ஆந்திர பிரதேசத்தில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டதை போல், தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வர வேண்டும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆட்சியமைக்கும் பட்சத்தில், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இன்னொரு கட்சியின் ஆதரவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே, ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூரில் விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் எல்லோரின் எதிர்பார்ப்பும் என்னவென்றால், விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சராவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
அதற்கான வாய்ப்புகள் அடுத்த 6 மாதத்தில் தெரியும். யாருக்கும் நாம் ஒன்றும் கொத்தடிமை அல்ல.. நாம் இங்குதான் இருப்போம். ஒரு குடும்பத்தை வழிநடத்துவதை போல் கட்சியை திருமாவளவன் வழிநடத்தி வருகிறார். எந்த கட்சியோ, மாநிலமோ, மாவட்டமோ, தெருவோ, வீடோ.. யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் போடும் ஒப்பந்தம் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications