திருமாவளவனுக்கு அச்சம்.. விரைவில் அவரை சந்திக்க போறோம்.. ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைவர் குமாரசாமி
சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இளைஞர்கள், முஸ்லீம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை கண்டு திருமாவளவன் அச்சப்படுகிறார் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநிலத்தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரத பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் குறித்தும் சேலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சிகள் மற்றும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய திட்டங்கள் குறித்து கோவையில் விவாதக் கூட்டம் நடைபெற்றது.

ஆர்எஸ்எஸ் இயக்கம் எழுச்சி
இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநிலத்தலைவர் குமாரசாமி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஆன்லைன் மூலமாக நாடு முழுவதும் இருந்து 7,25,000 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆயிரத்து 848 பேர் இணைந்துள்ளனர். இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம் எழுச்சி கண்டுள்ளது.

பல ஆண்டுகளாக ஊர்வலம் நடக்கிறது
ஆர்எஸ்எஸ் இயக்க காரிய கர்த்தாக்கள் சீருடையுடன் கட்டுக் கோப்பாக ஊர்வலத்தில் ஈடுபடுவர்கள். 70 - 80 ஆண்டுகளாக நாடு முழுவதும் இந்த ஊர்வலம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல ஆண்டுகளாக ஊர்வலம் நடக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்த போது, பலமுறை அனுமதி கொடுத்துள்ளார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பாலக்கோடு உள்ளிட்ட நகரங்களில் கூட ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடந்துள்ளது.

விரோத சக்திகள் தூண்டி விடுகின்றன
இது கட்டுக் கோப்பான ஊர்வலம் என்று போலீசாரும், பொதுமக்களும் பாராட்டியிருக்கின்றனர். ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழ்நாட்டில் நடத்தக் கூடாது என்று சில இந்து விரோத சக்திகள் தூண்டி விடுகின்றன. இந்த தூண்டுதலின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம். மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி சேவையை தரக்கூடியது. இந்த சேவையை தமிழ்நாட்டில் வரவிடாமல் தடுத்து வருகிறார்கள். இதற்கு தமிழக அரசுதான். முழு பொறுப்பு.

திருமாவளவன் அச்சப்படுகிறார்
ஆர்எஸ்எஸ் இயக்கம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்த மதத்தை சேர்ந்த இளைஞர்கள், முஸ்லீம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை கண்டு திருமாவளவன் அச்சப்படுகிறார். திருமாவளவனை விரைவில் சந்தித்து ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து அவரிடம் தெளிவுபடுத்த இருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications