கருத்துக்கணிப்பை எப்போதும் நம்பமாட்டோம்.. ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்: திருமா உறுதி!
சென்னை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை, ஜூன் 4ல் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி எனத் தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
மறைந்த முன்ளாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அவரது நினைவாக புகைப்படக் கண்காட்சி விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளன் எம்.பி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் 100% பாஜக வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. 40க்கு 40 திமுக கூட்டணி தான் வெல்லப்போகிறது. இந்தியா கூட்டணி வெல்லப் போகிறது, ஆட்சி அமைக்கப்போகிறது, பிரதமரை உருவாக்கப் போகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடியே உண்மையை ஒப்புக் கொண்டார். மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்கப்படும்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அதன் மீது நம்பிக்கையும் இல்லை. அதன் முடிவு தெரியும். ஊடகங்கள் ஒரு சார்பாக செயல்படுகின்றன என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். விரைவில் இந்தியாவை கடந்த 10 ஆண்டுகளாக சூழ்ந்துள்ள இருள் அகன்று, ஜூன் 4-ல் புதிய விடியல் மலரும்.
இந்தியா கூட்டணி ஆட்சி மலர்ந்து, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான புதிய விடியலாக ஜூன் 4 ஆம் தேதி இருக்கும். இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு திமுக தலைவர் ஸ்டாலினின் பங்களிப்பு என்பது மகத்தானது. இந்த வெற்றிக்குப் பிறகு மேலும் உறுதிப்படும்" என்றார்.
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், இந்தியா கூட்டணி சுமார் 150 இடங்களைப் பிடிக்கக்கூடும் என்றும் பெரும்பாலான ஊடகங்கள் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
அதேசமயம், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 35 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும், பாஜக ஓரிரு இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் பாஜகவின் தாமரை தமிழ்நாட்டில் மலர வாய்ப்பே இல்லை என அடித்துச் சொல்லி இருக்கிறார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications