விஜய் தப்பிக்க முடியாது.. மரண அரசியல் செய்வது பலியான மக்களுக்கு செய்யும் துரோகம்! ஆவேசமான திருமா!
சென்னை: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ள நிலையில், போலீசார் தவெக நிர்வாகிகளை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் மரணத்துக்கு விஜய் தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்க வேண்டும் எனவும், காவல்துறையை காரணமாகக் கூறி தட்டிக் கழித்து ஓடிவிட முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பாஜக, கரூர் நெரிசல் மரண பிரச்சினையை திசை திருப்ப, மடைமாற்றம் செய்ய முயற்சிக்கிறது. எனவே காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இதில் அவர் தலையிட வேண்டும்.

விஜய் கரூர் துயரம்
தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த எம்பிக்கள் கொண்ட குழு ஒன்றை நியமனம் செய்து கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும். உண்மை கண்டறியும் குழுவை நியமிக்க வேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன். பாஜக செய்யக்கூடிய சதி முறியடிக்க வேண்டுமென்றால், காங்கிரஸ் தலையிட வேண்டும். சிபிஐ கோரிக்கை கூட இதை திசை திருப்பக் கூடிய செயல். இதை அரசியல் பிரச்சனையாக தேர்தல் வரை கொண்டு செல்ல வேண்டும் என விரும்புவதாகத் தெரிகிறது. இது பெரும் துயரம், கொடும் துயரம், யாராலும் சகித்துக் கொள்ள முடியாத துயரம்.
திருமாவளவன் விமர்சனம்
ஆனால் இதை வைத்து அரசியல் செய்ய நினைப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் துரோகம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனி இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். இதற்கு எந்த காரணங்களைச் சொன்னாலும் தவெக தலைவர் விஜய் தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் தன்னைத் தேடி வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.
தவெக கூட்ட நெரிசல்
காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என தட்டிக் கழித்து ஓடிவிட முடியாது. முன்கூட்டியே உரிய நேரத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். 7 மணி நேரம் காத்திருக்க வைப்பது அதைவிடக் கொடுமையானது. முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்தால் என்ன ஆகும் என தலைவர்கள் முன்கூட்டியே உணர வேண்டும்.
தார்மீக பொறுப்பு
இனிமேல் காலதாமதமாகச் செல்லக்கூடாது என்ற படிப்பினையை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இந்தத் துயரச் சம்பவம் தந்திருக்கிறது. தொண்டர்கள், ரசிகர்கள் இடையில் மறித்தால் கூட, அதைத் தவிர்த்திருக்க வேண்டும். காவல்துறை கொடுத்த இடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தி மேலும் மேலும் தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தேங்கி இருந்ததுதான் காரணம்.
துரோகம்
காலம் தாழ்த்தி வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்கள் உரிய நேரத்தில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேர வேண்டும். பல்லாயிரக்கணக்கானவர்களைக் காக்க வைக்கக்கூடாது. இதுதான் கற்றுக்கொள்ள வேண்டியது. இதை அரசியல் செய்யப் பார்க்கிறார். தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்கு முயற்சிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் துரோகம்." என்றார்.












Click it and Unblock the Notifications