“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம்! பாஜக + தேர்தல் ஆணையத்தின் கூட்டு சதி” - திருமாவளவன்
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை(SIR) தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், "பாஜகவும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்தும் கூட்டு சதிதான் SIR என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "SIR வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில், எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. SIR என்பது பாரதிய ஜனதா கட்சியும், தேர்தல் ஆணையம் சேர்ந்து நடத்துகிற ஒரு கூட்டு சதி.

குடியுரிமையை பறிப்பதற்கான ஒரு செயல் திட்டமாகவும், எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான ஒரு செயல் திட்டமாகவும் இதை வடிவமைத்திருக்கிறார்கள். எனவே இது உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய முறைப்படி SR என்கிற சம்மரி ரிவிஷன் முறையையே இந்த தேர்தலுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
SIR ஒட்டுமொத்த தேசத்திற்கே அச்சுறுத்தல். பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தைக் கொன்று புதைக்கிற திட்டத்தின் விளைச்சல்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவது ஆக்குவது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத் தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அந்த திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
SIR-ஐ மேலோட்டமாக பார்த்தால், வாக்காளர் பட்டியல் சீராய்வு என்று சொல்லப்பட்டாலும், குடியுரிமையை பறிக்கிற தேசிய குடிமக்கள் பேரேட்டை உருவாக்குகிற சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற சதி முயற்சிதான். இதை வெளிப்படையாக அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அதுதான் உண்மை என்பதை உணர வேண்டும். இது நாட்டுக்கு நல்லதல்ல" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications