காட்டுமன்னார்கோவிலில் வாபஸ் பெற்றதற்கு திமுக அழுத்தம் காரணமா.. ஆதவ் புகாருக்கு திருமாவளவன் பதில்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விசிக தலைவர் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். இதற்கு திமுக அழுத்தம் காரணம் என தவெக ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார். அவருக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் உதயநிதிக்கு போட்டியாக வந்துவிடுவேன் என்கிற ஆதவ் அர்ஜூனாவின் கருத்து ஆதாரமில்லாத கற்பனை. அதீத கற்பனை. பொருத்தமில்லாத கருத்து. மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற கற்பனை. சிட்டிங் எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சீட் தவிர்த்துவிட்டார் திருமாவளவன் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் 3 பேரும் திமுகவுக்கு ஆதரவாக பேசியவர்கள் என்பதால் திருமாவளவன் முடிவெடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

அரசியல் உள்நோக்கம் இல்லை
அதில் திருமாவளவன் திமுகவின் அழுத்தத்திற்கு பணிய மாட்டார் என்கிற பொருள் இருக்கிறதா இல்லையா. அப்படியிருக்கும்போது நான் வாபஸ் பெற்றது மட்டும் திமுகவின் அழுத்தம் என்று எப்படி கூற முடியும். இரண்டிலும் முரண்கள் இருக்கின்றன. அவர்களின் அரசியலுக்காக அப்படி பேசுகிறார்கள். இதில் திமுகவின் அழுத்தம் இல்லை. காட்டுமன்னார் கோயில் தொகுதியில் நான் போட்டியிட விரும்பியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை
தேர்தலில் வென்று சட்டமன்றத்திற்கு செல்வது நன்மை தரும் என்று நம்பினேன். விளிம்பு நிலை மக்களுக்கான பிரச்சனைகளை சட்டமன்றத்தில் அழுத்தமாக பேசலாம் என்று நினைத்தேன். கூட்டணியின் நலன்கனை பாதிக்கும் வதந்திகளை சிலர் பரப்பியது என்னை சிந்திக்க வைத்தது. எங்கள் கூட்டணியின் வெற்றியை சந்திகேக்கிறேன் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. நான் உருவாக்கி வைத்த அரசியல் விழிப்புணர்வு தான் மக்கள் என் மீது காட்டும் அன்பிற்கு காரணம்.
நினைத்தது என்ன
இதுவரை என்னை 3 முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதில் காட்டுமன்னார்கோவில் மக்களுக்கு பெரிய பங்கு உள்ளது. இந்த மண்ணில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இளையபெருமாள். அவரின் மகன் நந்தகுமார் காலமாகிவிட்டார். அவரின் மனைவி எஸ்தருக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். அவர் தலித் அல்லாதவர் என்பதால் இங்கு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
அவர்கள் குடும்பத்தில் 4 பேர் அண்ணன் தம்பி, அதில் 3 பேர் காலமாகிவிட்டனர். அவர்கள் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர் ஜோதிமணி தான். அதனால் நான் நிற்கின்ற தொகுதியில் அவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளேன். கலைஞர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசுவது அறமற்ற செயல்" என்றார். திருமாவளவன் அளித்துள்ள பதில் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications