"இப்போலாம் யார் ஜாதி பார்க்குறானு கேட்பாங்க".. இந்த போட்டோவை பாருங்க புரியும்! திருமாவளவன் சுளீர்
சென்னை: பாடப்புத்தகம் ஒன்றில் வர்ணாசிரமம் குறித்த விளக்கப்படம் இடம் பெற்றிருந்தது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இது குறித்து டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சாதிய வன்கொடுமை, சாதி அடிப்படையில் ஆணவக்கொலை, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் செய்தியாக வெளிவரும்போதுதான் சனாதனம் குறித்தும் வர்ணாசிரமம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
இதர சமயங்களில் வர்ணாசிரமத்தையெல்லாம் யாரு சார் கடைப்பிடிக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வியெழுப்புவதை காணமுடிகிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் 'அதன்' இருப்பை உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

வர்ணாசிரமம்
இந்தியா முழுமைக்கும் நடைபெறும் சாதிய மோதல்கள், வன்கொடுமைகள், சாதியின் பெயரால் நடத்தப்படும் இதர வன்முறைகள் அனைத்துக்கும் வர்ணாசிரம அமைப்பு முறைதான் காரணம் என்றும், இந்த அமைப்பை கடுமையாக பின்பற்றும் மதம், சாதியை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் இடதுசாரி மற்றும் தலித்திய அமைப்புகள் கூறி வருகின்றன. எனவே இந்த வர்ணாசிரம அமைப்பு முறையை ஒழித்தால் மட்டுமே சாதிய கொடுமைகளிலிருந்து விடுதலையடைய முடியும் என்று அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கூறுகின்றன.

அனிச்சை செயல்பாடாக
ஆனால் சில வலதுசாரி ஆதரவாளர்கள் இந்த கருத்தை ஏற்காமல், "இப்போ எல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?" என்றும் "இப்போ எல்லாம் யாரு சார் வர்ணாசிரமத்தை பின்பற்றுகிறார்கள்?" என்றும் சமூக வலைத்தளங்களிலும் விவாதங்களிலும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இது குறித்து சில தலித்திய/இடதுசாரி ஆதரவாளர்கள், "வீட்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் நகம் வெட்டக் கூடாது, இவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த கூடாது என்றெல்லாம் நம்முடைய பெற்றோர்கள் கூறுகிறார்கள்.

புராண, இதிகாச கதைகள்
நமது பெற்றோர்கள் யாரும் வர்ணாசிரமத்தை படிக்கவில்லை, சாதிய பாகுபாடுகள் குறித்த மனு தர்மத்தை படிக்கவில்லை. ஆனால் ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என்று நாம் எப்போதாவது யோசித்தது உண்டா? இதற்கு காரணம் புராண கதைகள்தான். எனவே வர்ணாசிரமம் புராண, இதிகாச கதைகளின் வழியாக சாமானிய மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே சாமானியர்கள் மத்தியிலும் சாதிய பாகுபாடு இருப்பதற்கு காரணமாக இருக்கிறது." என்று விளக்கியுள்ளனர்.

திருமாவளவன் கருத்து
இது எல்லாம் ஒருபுறம் இருக்க பாடப்புத்தகம் ஒன்றில் வர்ணாசிரமம் குறித்த விளக்கப்படம் இடம் பெற்றிருந்தது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "பள்ளிப் பிள்ளைகளுக்கு வர்ணாஸ்ரம சமூக அடுக்குகளைக் கற்றுத் தருகிறது ஃபாசிச பாஜக அரசு. இப்போது எங்கே உள்ளது மனுதருமம் அல்லது வர்ணாஸ்ரம தருமம் என்று கேள்வி எழுப்புவோரின் கவனத்திற்காக. இந்துக்களில் நான்கு வகை மட்டுமே. எஸ்சி, எஸ்டி சமூகப் பிரிவினர் இந்நான்கு வகைகளைச் சாராதவர்கள்." என்று கூறியுள்ளார். தற்போது திருமாவளவனின் ட்வீட் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications