ஆம்ஸ்ட்ராங் மீது நடத்தப்பட்டது கோழைத்தனமான தாக்குதல்! குண்டர் சட்டத்தில் கைது பண்ணுங்க: திருமாவளவன்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது கோழைத்தனமான தாக்குதல் என்றும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் திருமாளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இன்று மாலை சென்னை பெரம்பூரில் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் கீரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற்கூராய்வுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். இந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திருமாளவன் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களைச் சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். சென்னை-பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பௌத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அம்மையாரின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.
அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications