Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றிருக்கிறது. ஆனால், இக்கட்சி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. இந்நிலையில், மநீம போட்டியிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது, கருத்தியல் வலிமை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று திருமாவளவன் வேதனை தெரிவித்திருக்கிறார்.

Thirumavalavan

பேச்சுவார்த்தையில் எது முக்கியம்?

இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அளவீடுகளில் வாக்குவங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வரையறைகளுக்கு உட்படாத சில கட்சிகளை அவற்றின் சமூக அடையாளங்களை பின்னணியாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், கட்சிகளின் "கருத்தியல் வலிமை" ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகவுள்ளது.

தொகுதிப் பங்கீடு நடக்கிறபோது ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதி எண்ணிக்கைகள் எத்தகைய வரையறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அவ்வப்போது நிலவும் அரசியல் சூழல்களைப் பொறுத்து அமைகின்றன. அத்துடன், கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் அணுகுமுறைகளைப் பொறுத்தும்; கூட்டணியின் தலைமை கையாளும் அரசியல் உத்திகளைப்பொறுத்தும் இடப்பகிர்வுகள் நிகழ்கின்றன.

வரலாற்றுத் தேவை

கூட்டணிக்குத் தலைமை வகிப்பவரின் நிலையிலிருந்து ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்துக் கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டியது கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சிக்குமுள்ள பொறுப்பாகும். கொள்கைப் பகையை வீழ்த்துவதும் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வதும் ஒவ்வொரு கட்சியின் கடமை.

ஆனால், அந்தக் கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு வெற்றிக்கான உத்திகளை வகுக்கவேண்டியது தலைமைக்குரிய தவிர்க்கமுடியாத பொறுப்பாகும். கருத்தியல் வலிமையை இன்றியமையாத ஒரு அளவுகோலாகக் கொண்டு இடப்பகிர்வு உள்ளிட்ட அணுகுமுறைகளைக் கையாள வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகவுள்ளது.

இடதுசாரிகளை அரவணைக்க வேண்டும்

கருத்தியல் உறுதிப்பாடு கொண்ட, நம்பகத்தன்மை வாய்ந்த தோழமை சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமே கொள்கைப் பகையை இம்மண்ணில் வேரூன்ற விடாமல் தடுக்க முடியும். அத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட இடதுசாரி தோழமை சக்திகளை அரவணைப்பதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கவேண்டியதும் அவர்களை வலுப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அதன்மூலம் ஒட்டுமொத்த கூட்டணிக்குமான நன்மதிப்பு மக்களிடையே பன்மடங்காகப் பெருகும்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நெருடல்

தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேவளையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது.

திமுகவின் செயல் ஏற்புடையதல்ல

தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிடவிரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே சனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும்.

கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும்

இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசன் அவர்களும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும்.

வாக்கு வங்கி வலிமை

மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், 4 சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்'கொண்ட அண்ணன் கமல்ஹாசன் அவர்களை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும்.

டார்ச்' சின்னத்தில் போட்டியிட அனுமதி

தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்!" என பதிவிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+