இது வீடா இல்லை கட்சி ஆஃபிஸா? வியந்து பார்த்த திருமாவளவன்! எலக்ஷன் பரபரப்பிலும் கூல் விசிட்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும், சென்னை வேளச்சேரியில் தனது பக்கத்து தெருக்காரர் விடுத்த அழைப்பை ஏற்று புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன், அங்கிருந்த புகைப்படங்களை கண்டு வியந்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் விசிகவுடன் திமுக சீட் ஷேரிங் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம், எத்தனை தொகுதிகளை கேட்கலாம் என்ற டிஸ்கஷனில் சில நாட்களாக தீவிரமாக உள்ளார் திருமாவளவன்.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த நவீன் என்பவர் தனது இல்லத்தின் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள வேண்டும் என திருமாவளவனை சந்தித்து சில நாட்களுக்கு முன்னர் அழைப்பிதழ் அளித்திருக்கிறார். அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த தேதியில் திருமாவளவனுக்கு மதுரையில் முதலமைச்சருடன் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி இருந்திருக்கிறது.
இருப்பினும் அழைத்திருப்பது பக்கத்து ஏரியாக்காரரே என்பதால் விமான நிலையத்துக்கு செல்வதற்கு முன்னர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றுவிட்டுச் செல்வோம் என அங்கு சென்றிருக்கிறார் திருமா. அங்கு, பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், ஆகியோரின் படங்கள் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும் இது வீடா இல்லை கட்சி ஆபிஸா என்கிற வகையில் திருமாவளவன் வியந்துபோனார்.
தனக்கு விமானத்திற்கு நேரமாகிறது என்பதையும் மறந்து வீட்டின் உரிமையாளர் நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை வாழ்த்தி பாராட்டியிருக்கிறார். ''அண்ணே ப்ஃளைட்டுக்கு டைம் ஆகிறது.. வாங்க போகலாம்..'' என தன்னுடன் வந்த கட்சிக்காரர்கள் அழைத்ததும் தான், தனக்கு மதுரையில் முதல்வருடன் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சி இருக்கிறது என்பதை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார்.
இதனிடையே புதுமனை புகுவிழாவுக்கு திருமாவை அழைத்த நவீன் என்பவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. சென்னை வேளச்சேரியில் தனது பக்கத்து ஏரியாக்காரர் அழைத்து செல்லாமல் இருப்பதா என்பதால், அவரது அழைப்பை ஏற்று அவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications