சென்னை பூர்வகுடிகளை விரட்டுவது நவீன தீண்டாமை.. கண்ணகி நகரில் வாழ்ந்து பாருங்கள் - திருமுருகன் காந்தி
சென்னை: பூர்வ குடிகளை பெருநகரத்திலிருந்து விரட்டும் நவீன தீண்டாமை முந்தைய அதிமுக ஆட்சியிலும் தற்போதைய திமுக ஆட்சியிலும் தொடர்வதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் அரசு நிலத்தில் குடியிருப்பதாக கூறி அங்குள்ள வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் புல்சோசர் கொண்டு இடிக்கப்பட்டன.

முதியவர் தீக்குளிப்பு
இதைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் கண்ணையன் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார். தீயில் கருகி படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வாசிகள் வீடுகளை இடித்த புல்டோசர் கண்ணாடிகளை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமுருகன் காந்தி கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "ஒரு பெருநகரம் என்பது அனைத்து மக்களுக்குமானது மட்டுமல்ல, அந்நகரை உருவாக்கிய பூர்வகுடிகளுக்கானது. அவர்களை குப்பையை போல அள்ளி ஊருக்கு வெளியே தூக்கி எறிவது மக்களாட்சிக்கானதல்ல. இந்த எதேச்சதிகாரத்தை நீதிமன்றங்களும், அதிகார வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள்.

திமுக ஆட்சியிலும் நடக்கிறது
அதிமுக ஆட்சியில் இது நடந்தது. அவர்களுக்கு முந்தைய திமுக ஆட்சியிலும் நடந்தது. இன்றைய திமுக ஆட்சியிலும் நடக்கிறது. நீதிபதிகள், IAS, IPS அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களை 220 ச. அடி வீட்டில் பெரும்பாக்கத்தில் குடியேற்றி அழகு பாருங்கள். கார், ட்ரைவர்கள், பணியாளர்கள் என சகல வசதிகளோடு ஊருக்கு மையத்திலேயே இவர்களுக்கு வீடு இருப்பது அவசியமெனில், எந்த வசதியுமற்ற அன்றாடங்காய்ச்சியாக வாழும் பூர்வகுடிகள் எதற்காக 30 கி.மி தொலைவிற்கு சென்று வாழவேண்டும்?

கண்ணகி நகரில் 30 நாள் வாழ்ந்து பாருங்கள்
உத்தரவிட்ட நீதிபதியும் அதிகாரியும், அமைச்சரும் குறைந்தது ஒருவார காலம் கண்ணகி நகரில் வாழ்ந்துவிட்டு வந்து உத்தரவிடட்டும். சுகபோக வாழ்வு வாழும் இந்நபர்கள் மக்கள் விரோதிகளாக, ஏழை, பூர்வகுடிகள் மீது நவீன தீண்டாமை கடைபிடிக்கும் நபர்களாகவே செயல்படுகிறார்கள்.
சென்னையில் திமுக ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் பூர்வகுடிகள் மீதான வன்முறையை எதிர்த்து சனநாயக ஆற்றல்கள் ஒன்றுபடவேண்டும்." என கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications