திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை ஏகாம்பரேஷ்வரர் கோவிலில் இருந்து கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி பாரத் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, யாத்திரைக்கு மனுதாரர் கேட்கும் வழித்தடம் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை. ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல என்று வாதிட்டார்.
இஸ்லாமியர்கள் அவர்களுடைய இடத்தில் வேண்டுதலுக்காக ஆடு கோழி பலியிட்டு படைத்து உண்ணுவது வழக்கமாக உள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கூட பிராணிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.
காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் ஆகியோர் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, தேவையற்ற கலவரங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமையை குலைத்து விடக்கூடாது. தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் பெயர்பெற்றது.
மத நல்லிணக்கத்தைக் காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும், ஒவ்வொருவரின் மத நம்பிக்கையை பாதுகாப்போம் என்றும் யாருடைய மத வழிபாட்டிலும் அரசு தலையிடாது என்றும் உறுதிப்பட தெரிவித்தார். யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பத்தகாத பிரச்னைகளை உருவாக்கும் என தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், யாத்திரை நடத்த கேட்டுள்ள வழித்தடம் நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதி, யாத்திரைக்கு வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு கூறி, மனு மீதான உத்தரவை நாளை மறுதினத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications