திருவள்ளூர் சிறுமி வழக்கு.. 30 வயது கொடூரன்.. பிடிபட்டவரின் அடையாளம் ஒத்துப்போகுது! ஐஜி அஸ்ரா கார்க்
திருவள்ளூர்: திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சுமார் 30 வயது இருக்கும் என்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். பிடிபட்டவரின் அடையாளமும், சிசிடிவி காட்சியில் இருந்தவரின் அடையாளமும் ஒத்துப் போவதாக கூறிய அஸ்ரா கார்க், கைதானவரின் பின்புலம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜூலை 12ஆம் தேதி மர்ம நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்குச் சென்ற சிறுமியை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், திடீரென அவரை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவரிடம் இருந்து எப்படியோ தப்பித்து அந்த சிறுமி பெற்றோரிடம் சென்றுள்ளார்.

இதன்பின் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமியை பின் தொடர்ந்து திடீரென தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் 8 வயது சிறுமியை இப்படித் தூக்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறுமி கொடுத்த வாக்குமூலத்தில் அந்த இளைஞர் இந்தியில் பேசியதாகத் தெரிவித்திருந்தார். இதன்பின் போலீசார் கடந்த சில நாட்களாகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
10 நாட்களுக்கு மேலாகியும் போலீசார் குற்றவாளியைக் கைது செய்யாததால், பொதுமக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 700க்கும் அதிகமான போலீசார் விசாரணை நடத்தினர். 14 நாட்களுக்குப் பின் இன்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரின் புகைப்படத்தைச் சிறுமியிடம் காட்டி போலீசார் உறுதி செய்திருக்கின்றனர். இதற்கு முன்பாக 2 பேரைப் பிடித்து விசாரித்து அவர்களின் புகைப்படத்தைச் சிறுமியிடம் காட்டிய போது, அவர்கள் இல்லை என்று மறுத்திருந்தார். தற்போது சிறுமி உறுதி செய்த நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பிடிபட்டுள்ள நபர் திருவள்ளூருக்கு ரயிலில் வந்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
அதேபோல் ஆதம்பாக்கம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததை முன்பாகவே நோட்டமிட்டிருக்கிறார். ஆந்திரா எல்லையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் ஒரு பிடிபட்டுள்ளதை அறிந்த பொதுமக்களும், உறவினர்களும் சம்பந்தப்பட்ட இளைஞரை எங்களிடம் காட்ட வேண்டும் என்று கவரப்பேட்டை காவல் நிலையம் முன்பு குவியத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பேசுகையில், சிறுமி வன்கொடுமை வழக்கில் பிடிபட்டவரின் அடையாளம் கிட்டத்தட்ட சிசிடிவி காட்சிகளில் இருந்தவருடன் ஒத்துப் போகிறது. பிடிபட்டவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவரிடம் முதற்கட்ட விசாரணை நடந்து முடிந்திருக்கிறது.
அடுத்தகட்ட விசாரணை நடக்கிறது. இது மிகவும் முக்கியமான வழக்கு. கைதானவரைப் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. விசாரணையின் முழு விவரங்களை இப்போதைக்கு வெளியிட முடியாது. பிடிபட்டவரின் பின்புலம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகள் தலைமையில் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications