சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்! 4ஆவது நாளாக சசிகாந்த் செந்தில் எம்பி உண்ணாவிரதம்
சென்னை: மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலுக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் 4ஆவது நாளாக அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ 2,152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் ஆக.29 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

திருவள்ளூரில் கடந்த 30ஆம் தேதி அவர் 2ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தின் போது சசிகாந்த் செந்தில் எம்பிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
ரத்த அழுத்தம் குறைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கும் அவர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார்.
மருத்துவர்கள் அவரது உடல்நிலையை காரணம் காட்டி, உணவு அருந்துமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்படாமல் இருக்க, அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவரை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சந்தித்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் சசிகாந்த் சிரித்தபடியே மறுத்துவிட்டார். தற்போது மருத்துவமனையில் இருந்தபடியே 4ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications