கருணாநிதிக்காக விட்டுக்கொடுத்த பண்பு.. ஸ்டாலின் பெரிதும் நம்பும் பூண்டி கலைவாணன்.. யார் இவர்?
திமுகவிற்காக 12 வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக உழைத்த பூண்டி கலைவாணன் திருவாரூர் திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: திமுகவிற்காக 12 வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக உழைத்த பூண்டி கலைவாணன் திருவாரூர் திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இவரின் தேர்வு திருவாரூர் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. உள்ளூர் அரசியல் தெரிந்தவர் தேர்தலில் நிற்பதுதான் சரியாக இருக்கும் திமுக தொண்டர்கள் பேசி வருகிறார்கள்.
விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்
13 ஆண்டுகளுக்கும் மேலாக பூண்டி கலைவாணன் திமுகவில் இருக்கிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் திருவாரூரில்தான் தற்போது வசித்து வருகிறார். 2007ல் இவர் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதில் இருந்தே அவர் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளராக இருக்கிறார்.
கொலை செய்யப்பட்டவர்
திமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர் பூண்டி கலைச்செல்வன். இவர் பூண்டி கலைவாணனின் சகோதரர். திருவாரூரில் திமுகவை மிகவும் வலுவான கட்சியான மாற்றியதில் பூண்டி கலைச்செல்வன் மற்றும் பூண்டி கலைவாணனுக்கு பெரிய பங்கு இருக்கிறது. கடந்த 2007ம் வருடம் அரசியல் பகை காரணமாக பூண்டி கலைச்செல்வன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து திருவாரூரில் நிறைய கைதுகள் நடந்தது.
பதவிக்கு வந்தார்
இந்த நிலையில் பூண்டி கலைச்செல்வனின் கொலைக்கு பின் அவரது சகோதரர் பூண்டி கலைவாணன் அந்த இடத்திற்கு வந்தார். திமுக மாவட்டச் செயலாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டார். இவர் பதவியேற்ற விழாவே மிகவும் பிரம்மாண்டமாக திருவாரூரில் நடந்தது. பதவிக்கு வந்த கையோடு திருவாரூரில் திமுகவை வலுப்படுத்தும் பணிகளில் பூண்டி கலைவாணன் ஈடுபட்டார்.
கருணாநிதிக்கு விட்டுக் கொடுத்தார்
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியை இரண்டு முறை விட்டுக் கொடுத்தவர்தான் பூண்டி கலைவாணன். திருவாரூர் தொகுதியில் கருணாநிதி நிற்க வேண்டும் என்று இவரே கோரிக்கை வைத்தும் இருக்கிறார். திமுகவிற்காக நிறைய அடிப்படை பணிகளை திருவாரூரில் இவர் செய்துள்ளார்.
பிரச்சாரம் செய்தார்
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நின்ற இரண்டு தேர்தலிலும் பூண்டி கலைவாணன் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தவர். இதன் காரணமாகவே இவர் கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானார். கருணாநிதி அந்த தொகுதியில் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவும் பூண்டி கலைவாணன் ஒருவகையில் காரணம்தான்.
தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இந்த முறையும் கூட இவர் திருவாரூர் தொகுதியை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுக்கத்தான் நினைத்தார். ஸ்டாலினுக்காக இவரே கூட விருப்ப மனு தாக்கல் செய்தார். ஆனால் இவரின் தீவிர உழைப்பிற்கு பரிசாக திமுக சார்பாக போட்டியிடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.