இது அறிவிக்கப்படாத அவரச நிலை.. பிபிசி மீதான வருமான வரி ஆய்வால் கொதித்த தமிழக காங்கிரஸ்! கடும் சாடல்
பிபிசி நிறுவனம் மீது இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது என மத்திய அரசை விமர்சித்துள்ளது.
சென்னை: குஜராத் மதகலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட நிலையில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இன்று டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு (சர்வே) மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி ‛நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளது' என மத்திய பாஜக அரசை கடும் வார்த்தைகளால் சாடியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன்பு குஜராத் மாநில முதல்வராக இருந்தார். இவர் முதல்வராக பதவி வகித்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. அதாவது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் சாதுக்கள், இந்து யாத்ரீகர்கள் இறந்த நிலையில் பல இடங்களில் வன்முறை வெடித்து ஏராளமான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் நரேந்திர மோடி உள்பட பல அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நரேந்திர மோடியை விடுதலை செய்தது.

வருமான வரி ஆய்வு
இந்நிலையில் தான் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 பகுதிகளாக ஆவணப்படம் தயாரித்து சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில் பலரும் தடையை மீறி ஒளிபரப்பு செய்தனர். இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் இன்று டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஆய்வு(சர்வே) மேற்கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் உள்பட பல்வேறு மூத்த தலைவர்கள், எம்பிக்கள் வருமான வரித்துறை ஆய்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் என பாஜகவுக்கு எதிராக நிலைப்பாடு கொண்ட அனைத்து கட்சியினரும் இந்த வருமான வரி ஆய்வை எதிர்த்து வருகின்றனர்.

அறிவிக்கப்படாத அவசர நிலை
அந்த வரிசையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ் ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த பதிவில், ‛‛முதலில் பிபிசி ஆவணப்படம் வந்தது, அது தடை செய்யப்பட்டது. இப்போது பிபிசியை ஐடி ரெய்டு செய்துள்ளது. இது அறிவிக்கப்படாத அவசரநிலை'' என சாடியுள்ளது.

மல்லிகார்ஜூன கார்கே எதிர்ப்பு
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பிபிசி மீதான வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர், ‛‛மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தொலைதூர விமர்சனக் குரல்களை நெரிப்பதற்காக, இதுபோன்ற, வெட்கக்கேடான மற்றும் மன்னிக்கமுடியாத, பழிவாங்கலுடன் நடத்தப்படுகிறது.எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களைத் தாக்குவதற்கு, ஜனநாயக நிறுவனங்களைப் பயன்படுத்தினால், எந்த ஜனநாயகமும் வாழ முடியாது. மக்கள் இதனை எதிர்ப்பார்கள்'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications