தூத்துக்குடி: அடியாள் போல மாறிய சுடலை கண்ணு.. அவரே 17 ரவுண்டு சுட்டார்! அருணா ஜெகதீசன் ஆணையம் திடுக்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் துப்பாக்கியால் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். இதன் மூலம் அவரை அடியாள் போல் காவல்துறை பயன்படுத்தி உள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தன. 2018 ல் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பொதுமக்கள் அமைதியான வழியில் போராடிய நிலையில் போராட்டத்தின் 100வது நாளான 2018 மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலம் சென்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி
இந்த ஊர்வலத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஓய்வு நீதிபதி ஆணையம்
இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா கெஜதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018 ஜூன் மாதம் 4ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. 4 ஆண்டுகளாக நடந்த விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது இந்த விசாரணை அறிக்கை முதல்வர் முக ஸ்டாலினிடம் மே மாதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு திடுக்கிட வைக்கும் விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

17 ரவுண்ட் சுட்ட போலீஸ்காரர்
அதன்படி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார் என்ற தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே போலீஸ்காரரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும், தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உடற்கூராய்வு மூலம் உறுதியாகி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர போலீசார் வரம்பு மீறியதாகவும், அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொடூரமான செயல்
மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. போலீஸ்காரர் காயம் அடையாத நிலையில்அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். சில போலீசார் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களை கொன்றுள்ளனர். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லாத நிலையில் துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் அவர்கள் சிதறி ஓடி இறந்துள்ளனர். இது கொடூரமான செயல் என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடவடிக்கைக்கு பரிந்துரை
மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமான தென்மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜி தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையானது மொத்தம் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்டது. 1,500 வீடியோ ஆவணங்கள், 1,250 சாட்சிகள், 1,500 காவல்துறையினரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த முழு தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications