தோராய பட்டா முக்கியத்துவம்.. அதென்ன தூய பட்டா, 2C பட்டா.. நிலம் வைத்துள்ளவர்கள் அறிய வேண்டிய விஷயம்
சென்னை: பட்டா என்பது நிலத்தின் உரிமையை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் ஒரு ஆவணமாகும். தமிழ்நாட்டில் பல்வேறு பட்டா வகைகள் உள்ளன, அவை நிலத்தின் வகை, உரிமையாளர் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து வேறுபடும். அந்தவகையில், பட்டா ஆவணத்தின் முக்கியத்துவம் என்ன? பட்டாவில் எத்தனை வகைகள் உள்ளன? தோராயப் பட்டா, தூயப்பட்டா என்றால் என்ன? என்பதை பற்றி மட்டும் சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
நில உடமை பதிவேடு அல்லது நில உடமை ஆவணத்தின் பெயர்தான் பட்டா என்பதாகும்.. யார் பெயரில் சொத்துக்கள் உள்ளதோ, அவர்தான் இப்போதைய நில உரிமையாளராக கருதப்படுவார.

பட்டா என்ற ஆவணத்தில் சம்பந்தப்பட்ட மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலம் சர்வே எண், நிலம் வகைகள், வரித் தொகை, விஸ்தீரணம், உரிமையாளரின் பெயர், அவரின் தகப்பனார் அல்லது கணவரின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.
பட்டாக்களின் வகைகள்
ஒருவேளை நிலம் நிறுவனத்தின் பெயரில் இருந்தால், பட்டாவும் நிறுவனத்தின் பெயரிலேயே இருக்கும். இவைகளுக்கு அப்பாற்பட்டு, மேலும் தகவல்கள் நிலத்தை பற்றி தேவைப்பட்டால், அவையும் அதில் இடம்பெற்றிருக்கும்.
பட்டாக்களில் யுடிஆர் பட்டா (UDR Data Registry), 2. தோராய பட்டா & தூய பட்டா, ஏடி கண்டிசன் பட்டா- AD Assignment Land(Adi Dravidar), 4. நில ஒப்படை பட்டா (Assignment patta), 5. டிஎஸ்எல்ஆர் பட்டா (TSLR PATTA = Town Survey Land Record), 6. 2C பட்டா- மர பட்டா - தூசு பட்டா, 7. கூட்டு பட்டா (joint patta), 8. தனி பட்டா (Individual Patta) இப்படி பல வகைகள் உள்ளன.
தோராயப்பட்டா
அந்தவகையில், தோராய பட்டா, தூய பட்டா, 2C பட்டா- மர பட்டா - தூசு பட்டா இவைகளை பற்றி மட்டும் இங்கே அறிந்து கொள்வோம்.. தோராய பட்டா, தூய பட்டா இந்த இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தன்மைகளை பெற்றிருப்பதாகும.
பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக, குறிப்பிட்ட நிலத்தில் வசித்து வருபவர்களுக்கு தோராய மற்றும் தூய பட்டா வழங்கப்படுகின்றன. தோராயம் என்பதே ஒரு சரியான அளவுகோல் கிடையாது. அரசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நத்தம் அளவை செய்திருக்கும். கூடுதலாக ஏக்கர் கணக்கிலும் நத்தம் புறம்போக்குகளாக அரசாங்கம் அமைத்திருக்கும்.
நிலம் உள்ளவர்கள் அறிய வேண்டியது
இதில் நிலம் இல்லாதவர்களுக்கும் அல்லது அனுபவ முறையில், அங்கு ஏற்கனவே வசித்து வரும் மக்களுக்கும் அந்த இடத்தில் ஒவ்வொருவருக்கும் பட்டாவை ஒதுக்கி தரும். இதைத்தான் தோராய பட்டா என்கிறோம்.
அதாவது, நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும். சாலைகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளை தக்க முறையில் ஆவணப்படுத்தி, நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்த அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்குவதன் மூலம் நிலம் வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
திருத்தங்கள் - தூய பட்டா
மேற்கண்ட பட்டாவில் உள்ள பெயர்கள், அளவுகள் போன்றவற்றில் திருத்தங்கள் கண்டறியப்பட்டு அவை தெரிவிக்கப்படும் நிலையில் தக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் அதற்கு தோராய பட்டா என குறிப்பிடப்படுகிறது.
சர்வேயரை கொண்டு, ஒரு நிலங்களாக அல்லது வீட்டு மனைகளாக அளந்து அனைவருக்கும் இந்த பட்டா வழங்கப்படும். இதில் பிழைகள் ஏதாவது இருந்தால், 45 நாட்களுக்குள் தாசில்தார் அலுவலகம் சென்று மாற்றிக் கொள்ள வேண்டும். பிழைகளை திருத்துவதற்கு கால அவகாசம் தரப்படும். எனவேதான், தோராய பட்டா என்பதே ஒரு தற்காலிக பட்டாவாகும்.
இந்த பட்டாவின் பின்புறம், சரியான அளவுகளுடன் நிலத்தின் வரைபடமும் அமைந்திருக்கும். தோராய பட்டா பெறப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், பிழைகள் திருத்தப்பட்ட தூய பட்டாவை பெற்றுக் கொள்ளலாம். மிகவும் துல்லியமான சரியான பட்டாவை தான், தூய பட்டா என்கிறோம். இதில் எந்த விதமான பிழையும் இருக்காது.. சரியான நில அளவை செய்யப்பட்டிருக்கும்.
தோராய பட்டா என்றால் என்ன
தோராய பட்டா வைத்துள்ளோருக்கு இ-பட்டா வழங்க வேண்டும் என்று அரக்கோணம் எம்எல்ஏ ரவி சமீபத்தில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்திருந்த நிலையில், விரைவில் அனைவருக்கும் இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் உறுதியளித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
2C பட்டா- மர பட்டா - தூசு பட்டா என்றால் என்ன தெரியுமா? கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் "C" பதிவேட்டில் தரப்படும் பட்டாவுக்கு 2C பட்டா என்பார்கள். இதைத்தான் பேச்சுவழக்கில் தூசி பட்டா என்றாயிற்று..
அரசு நிலத்திலுள்ள புளியமரங்கள், பனை மரங்கள் போன்ற கனிதரும் மரங்களை பராமரிக்கவும் அவற்றை அனுபவிக்கவும் ஒருவருக்கு உரிமையளித்து பட்டா அளிக்கப்படுகிறது. இதற்குதான் 2C பட்டா என்பர். இது 2ம் நம்பர் கிராம கணக்கு புத்தகத்தில் C பதிவேட்டில் பதிவாகியிருக்கும்.. இதற்கு மர பட்டா என்றும் மற்றொரு பெயர் உண்டு.












Click it and Unblock the Notifications