பத்த வச்சுட்டாரே பழனிசாமி.. பார் ஊழலில் பல்லாயிரம் கோடி ஸ்டாலினுக்கு போகுதாம்! மதுரை மாநாட்டில் பரபர
மதுரை: முறைகேடான பார்கள் மூலம் கிடைக்கும் பல்லாயிரம் கோடி வருவாய் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செல்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், "கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். அவர் உருவாக்கிய கட்சி அதிமுக. தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுக. இது அதிமுகவின் பொன்விழா ஆண்டு. 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்து உள்ளோம். எடப்பாடி பழனிசாமி என்னும் நான் உழைப்பால் உயர்ந்தவன்.

இங்கே உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் உழைப்பாளிகள். அதிமுக தொண்டன் என்று சொன்னாலே பெருமை. கொரோனா பற்றி தெரியாத போதும் கூட அதன் பரவலை தடுத்தோம். மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்தது அதிமுகதான். நமது ஆட்சியில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்தோம். ஏராளமான கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளை திறந்து இருக்கிறோம். இந்த பழனிசாமி பொய் பேசி மக்களை ஏமாற்றுபவன் இல்லை. இந்த பழனிசாமி சாதித்து காட்டுபவன். திமுக அரசை பொறுத்தவரை பொய்தான் மூலதனம்.
கச்சத்தீவை மீட்போம் என்று ஸ்டாலின் பச்சைப்பொய் பேசினார். கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது திமுக காலம். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தட்டிக்கேட்கவில்லை. கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அதிமுக அரசு கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை நிறைவேற்றியது.
திமுக அரசு நீட் விவகாரத்தில் நாடகம் போடுகிறது. உதயநிதி ஸ்டாலின் இன்று நடத்திய உண்ணாவிரத போராட்டம் நாடகம். 2 ஆண்டில் நீட் விலக்கு பெற என்ன செய்தீர்கள்? நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகதான். அதிமுக அதை தடுக்க போராடியது.
டாஸ்மாக்கில் ஏழை எளியோர் மதுவாங்கினால் ரூ.10 அதிகம் கேட்கிறார்கள். தினமும் டாஸ்மாக்கில் ஒரு கோடி மது பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் ரூ.10 கோடி முறைகேடு நடக்கிறது. தமிழ்நாட்டில் 3,600 சட்டவிரோத பார்கள் இயங்கி வருகின்றன. கலால் வரி செலுத்தாமல் மது கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
முறைகேடான பார் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கிடைக்கும் வருவாய் எல்லாம் திமுக மேலிடத்துக்கு செல்கிறது. மேலிடம் என்றால் யார்? அனைத்து வருவாயும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போகிறது. திமுகவின் வழக்கறிஞர்கள் இன்று அரசு வழக்கறிஞர்கள் ஆகிவிட்டனர். திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
உயர்கல்வித் துறை அமைச்சர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது. ஊழல் வழக்கில் விடுவிக்கப்பட்ட திமுக அமைச்சர்களை சும்மா விட மாட்டோம். ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் கம்பி எண்ணி வருகிறார். அதிமுகவினருக்கு எதிரான வழக்கை சட்டப்போராட்டம் நடத்தி வெல்வோம்.
தொண்டராக இருப்பவர் அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன். 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாடு சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த மாநாட்டுக்கும் இவ்வளவு பேர் வந்தது கிடையாது. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு சரித்திர சாதனையை படைத்து இருக்கிறது." என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications