கால்வாயில் கொட்டப்பட்ட ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள்! ஷாக்கான சென்னை மக்கள்.. பரபரப்பு
சென்னை: தாம்பரம் பகுதியில் கால்வாயில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ளத்தில் பால் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று இருந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான பால் பாக்கெட்டுகள் கால்வாயில் வீணாக கொட்டப்பட்டிருக்கிறது.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வேளச்சேரி போன்ற சென்னையின் புறநகர் பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருந்திருக்கிறது. சில இடங்களில் மழை நீர் வடியாமல் இருப்பதால் மின்சாரம் வழங்கப்படவில்லை.

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.
வீடு வாசல், கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்கள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு மொட்டை மாடிகளில் குடியேறி மக்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொண்டனர். இந்த சூழலில் குடிநீருக்கும், பாலுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் பால் பாக்கெட் கிடைக்காத நிலை இருந்தது. சென்னையில் இருக்கும் ஆவின் பால் பண்ணையில் மழை வெள்ளம் புகுந்ததாலும், பணியாளர்களால் பணிக்கு வர முடியாததாலும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

எனவே பொதுமான அளவு ஆவின் பாலை விநியோகிக்க முடியவில்லை. மறுபுறம் தனியார் பால் ஆந்திராவிலிருந்துதான் வரும். ஆனால் ஆந்திராவில்தான் புயல் கரையை கடந்தது என்பதால் அங்கும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனவே குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் பால் இல்லாமல் சிரமத்தை சந்தித்தனர். மீறி பால் கிடைத்தாலும் 30 ரூபாய் மதிப்புள்ள பால் பாக்கெட் 50-70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மழை நின்று 4 நாட்கள் கழித்துதான் பால் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சுமார் 2000க்கும் அதிகமான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருக்கின்றன. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வளவு பால் பாக்கெட்டுகள் இருந்திருந்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய அளவில் உதவியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.












Click it and Unblock the Notifications