சசிகலா ஆதரவு போஸ்டர்கள்... மேலும் 3 நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக அதிமுகவில் இருந்து மேலும் மூன்று பேர் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா, கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிந்து, விடுதலை ஆகும் நாள் நெருங்கும்போது, அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின், கொரோனாவில் இருந்து குணமடைந்த சசிகலா, கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட சசிகலாவை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சில அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டினர்.
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி தேனி, திருச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னராஜா, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தின் சாமிநாதன், மயிலாடுதுறையின் குத்புதின் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர்,