மதுரை அருகே போலீஸ் ஜீப் மோதி நடந்த துயரம்.. கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
மதுரை: போலீஸ் ஜீப் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல், போலீஸ் வேன் டிரைவரை கைது செய்ய வேண்டும் எனக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், சிட்டப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20), இவர்களுக்கு அஷ்வின் (2) மகன் உள்ளார். இவர்களது உறவினர் தங்கம்மாள் மதுரை அனஞ்சியூர் பகுதியில் மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு, மூவரும் இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சோனை ஈஸ்வரி (25) என்பவரும் பயணம் செய்தார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், சக்குடி அருகே எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்யா மற்றும் அஷ்வின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். சோனை ஈஸ்வரி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அங்கு விரைந்து 3 பேரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடலை எடுக்க விடாமல், போலீஸ் வேன் டிரைவரை கைது செய்ய வேண்டும் எனக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு சென்ற சிவகங்கை எஸ்.பி சிவபிரசாத் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications