மூணும் ஒன்னுக்கொன்னு சளைச்சதில்ல.. திண்டுக்கல் தேர்தலில் 3 வாரிசுகள்! சட்டசபை செல்லப் போவது யார்?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அரசியல் களம் இந்த முறை மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது. குறிப்பாக இந்த மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மூன்று முக்கிய தொகுதிகளில் வாரிசு அரசியல் கடுமையாக விமர்சிக்கபடுகிறது. 1 தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் 2 தொகுதிகளீல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என இரு கட்சிகளும் 3 தொகுதிகளில் வாரிசுகளை களமிறக்கியுள்ளதால், இந்த தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது.
கடைசி நேர பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது 2026 சட்டமன்ற தேர்தல் களம். எப்படியாவது இரண்டாவது முறை ஆட்சி அமைத்த விட வேண்டும் என திமுக தீவிரமாக முயன்று வருகிறது.

அதே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் தோற்றதில்லை என்ற சாதனையை தக்க வைக்க தீவிரமாக முயன்று வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. திமுக தரப்பிலும் அதிமுக தரப்பிலும் பல சீனியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள்.
2026 சட்டசபை தேர்தல்
கடந்த காலங்களில் மனக்கசப்புகள், உட்க்கட்சி பூசல்கள் இருந்தாலும் தேர்தலில் அதனை காட்டிக் கொள்ளக் கூடாது என திமுக தலைமை கடும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.. மேலும் அதிமுக தரப்பில் இருக்கும் சீனியர்களை எதிர்த்துப் போட்டியிட்டு அவர்களை தோல்வியடைய செய்தால் அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு ஆஃபர்கள் வழங்கப்பட்டதால் மூத்தவர்களை எதிர்த்து களம் இறங்கி இருக்கின்றனர் திமுக ஜூனியர்கள்.
திண்டுக்கல் தேர்தல்
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் மூன்று தொகுதிகள் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. அதில் முதன்மையானது திண்டுக்கல் தொகுதி. இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இ.பெ. செந்தில்குமார் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் தமிழக அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில்குமார் ஏற்கனவே மூன்று முறை பழநி தொகுதி பகுதியில் போட்டியிட்டு, இரண்டு முறை வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர்.
ஐபி செந்தில் குமார்
ஒருமுறை தோல்வியை சந்தித்திருந்தாலும், இந்த முறை திண்டுக்கல் தொகுதியில் நான்காவது முறையாக களமிறங்கி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்கு எதிராக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் போட்டியிடுவதால், இந்த தொகுதியில் கடுமையான நேரடி மோதல் உருவாகியுள்ளது.
வி.பி.பி. பரமசிவம்
அடுத்ததாக அதிக கவனம் பெற்றுள்ள தொகுதி வேடசந்தூர் தொகுதி. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளவர் வி.பி.பி. பரமசிவம். இவரது தந்தை வி.பி. பாலசுப்பிரமணியன் எம்ஜிஆர் காலத்தில் இரண்டு முறை எம்எல்ஏவாகவும், சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். தந்தையின் அரசியல் மரபை தொடர்ந்து பரமசிவம் இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
சாமிநாதன்
முன்னதாக ஒருமுறை வெற்றி பெற்ற இவர், கடந்த தேர்தலில் தோல்வி சந்தித்திருந்தார். தற்போது மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் சாமிநாதன் கடும் போட்டியை வழங்கி வருகிறார். இதனால் இந்த தொகுதி கடும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரவி மனோகரன்
மூன்றாவது முக்கிய தொகுதி பழநி தொகுதி ஆகும். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவி மனோகரன் மற்றொரு வாரிசு வேட்பாளராக கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது தந்தை குப்புச்சாமி எம்ஜிஆர் காலத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியின் எம்எல்ஏவாக இரண்டு முறை பதவி வகித்தவர். ரவி மனோகரன் கடந்த தேர்தலில் முதன்முறையாக பழநி தொகுதியில் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது இரண்டாவது முறையாக அதே தொகுதியில் களமிறங்கி, இந்த முறை வெற்றியைப் பெற வேண்டும் என்ற உறுதியுடன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்கு எதிராக திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி போட்டியிடுவதால், இந்த தொகுதியிலும் கடும் போட்டி நிலவுகிறது.
வாரிசு மோதல்
திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று முக்கிய வாரிசுகள் களத்தில் இருப்பது இந்த முறை தேர்தலை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது. குடும்ப அரசியல் மீண்டும் பலம் பெறுகிறதா, அல்லது அனுபவம் மற்றும் உள்ளூர் ஆதரவு யாருக்கு சாதகமாக அமைகிறது என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே தெளிவாக தெரியவரும் என்கின்றனர் திண்டுக்கல் அரசியல் கட்சியினர்.












Click it and Unblock the Notifications