சசிகுமார் நடித்த அயோத்தி படத்தின் கதை- முட்டி மோதும் எழுத்தாளர்கள் எஸ்ரா, மாதவராஜ், நரேன்!
சசிகுமார் நடித்த அயோத்தி படம் கதை மற்றும் திரைக்கதை பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறது.
சென்னை: நடிக சசிகுமார் நடித்த அயோத்தி படத்தின் கதை யாருடையது என்பது தொடர்பாக எழுத்தாளர்கள் எஸ்ரா, மாதவராஜ் மற்றும் நரேன் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சசிகுமார் நடித்த உணர்வுப்பூர்வமான திரைப்படம் அயோத்தி. படம் நெடுகிலும் மனம் ஒருவித பதற்றத்துடனேயே பயணிக்க வைக்கிறது. படத்தின் கடைசி அத்தியாயம் முட்டி நிற்கும் பெருவிழி நீரை கொட்டித்தான் தீரும் என்கிற வகையிலான திரைக்கதை.

சசிகுமார் நீண்ட இடைவெளிக்குப் பின் வெற்றிகரமான திரைப்படத்தை தந்துள்ளார். இப்படம் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறது. இப்படத்தின் கதை எழுத்தாளர் எஸ்.ரா.வுடையது என்கிறது தயாரிப்பு குழு.
இதனை தமது சமூக வலைதளப் பக்கத்தில் எஸ்.ரா பகிர்ந்துள்ளார். அயோத்தி படம் தொடர்பாக எஸ்.ரா. எழுதிருப்பதாவது: சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன். படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள். இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது. தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்லதொரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன். இன்று அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் சசிகுமார் வந்திருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு திரைப்படம் எழுதுகிறேன். புதிய படத்திற்கான கதை குறித்துப் பேசினோம். இவ்வாறு எஸ்.ரா. எழுதியுள்ளார்.
ஆனால் எழுத்தாளர் மாதவராஜ், அயோத்தி தொடர்பாக 2 பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று: அயோத்தி திரைப்படம் யாருடைய 'கதை'யும் அல்ல. உண்மை நிகழ்வு. அதில் நேரடியாக பங்கு பெற்ற இரண்டு தோழர்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உயிரோட்டமாய் முதன் முதலில் எழுத்தாக செப்டம்பர் 2011ல் ஆவணப்படுத்தியதும் ஒரு கதை போல எழுதியதும் நான். சம்பந்தப்பட்ட அந்த தோழர்களே என் பதிவைப் படித்து விட்டு கண் கலங்கினர். நான் எழுதியதன் மூலம் அந்த தோழர்களை எங்கள் சங்கமே கொண்டாடியது. தீராத பக்கங்களில் படித்து விட்டு பலரும் பாராட்டினர். எல்லாவற்றையும் அப்படியே மறைத்து விட்டு அல்லது புதைத்து விட்டு என் கதை என்றும், என் அறிவுச் சொத்து எனவும் உண்மையை புரட்டுவது யோக்கியமும், அறமும் ஆகாது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், அயோத்தியா பட தயாரிப்பாளர், இயக்குனருக்கும் என் கண்டனங்கள். இவ்வாறு மாதவராஜ் எழுதியுள்ளார்.
இன்னொரு எழுத்தாளர் Naran, அயோத்தி படத்தின் கதை தம்முடையது என்கிறார். Naran எழுதி இருப்பதாவது: கடந்த 8 நாட்களாக எனது மகள் சூசனை உடல்நலக் குறைவின் காரணமாக Chennai SIMS ல் அனுமதித்த காரணத்தால் ( அதன் பின் தொடர்ச்சியான பயணமும்...) இதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. நிறைய நண்பர்கள் அந்த Trailer யைப் பார்த்துவிட்டு வாரணாசி கதையைப் போலவே இருப்பதாக சொன்னார்கள். பார்த்துவிட்டு எனக்கும் அப்படித்தான் தோன்றியது.தயாரிப்பாளரிடம் போன் செய்து கேட்ட போது அவர் இயக்குநரின் எண் அனுப்பி பேசச் சொன்னார் . நானும் அவரிடம் என் தரப்பு சந்தேகத்தைச் சொல்லி படத்தைப் பார்க்க அனுமதிக்க முடியுமா ? என்றுக் கேட்டதற்கு அவர் படத்தை காட்ட முடியாதென மறுத்து விட்டார். வேண்டுமானால் கேஸ் போட்டுக் கொள்ளுங்கள் என்றுச் சொல்லி விட்டார்.
அதன் பிறகு தான் கதை எழுத்தாளர்.எஸ்.ராவினுடையது என்றுச் சொன்னார்கள்.நான் அவருக்கும் பேசினேன்.அவர் இது தனது கதை என்றும் , பலவருடத்திற்கு முன்பே அதை எழுதியதாகச் சொன்னார்.
அந்த கதை வாசிக்கக் கிடைக்குமா ?என்றுக் கேட்டதற்கு .... சினிமாவிற்கான கதையை நான் எப்போதும் எழுதுவதில்லை. அதை சொல்ல மட்டுமே செய்வேன் என்றுச் சொன்னார்.( தயாரிப்பாளர் தன்னிடம் எழுத்தாளர் 2 பக்க கதை கொடுத்ததாகவும் , அதற்கு 8 லட்சம் பணம் கொடுத்ததாகவும் சொல்லி விட்டார்.எழுத்தாளர் . மாதவராஜ் அந்த 2 பக்கத்தை வாங்கிப் பார்த்தால் தெரியும். ) நான் அதன் பின் என் மகளின் ஆஸ்பத்திரி காரியங்களைப் பார்க்க போய்விட்டேன் . எனது வாரணாசி கதையை வாங்கியிருக்கும் முக்கியமான இயக்குநரும் இந்த பிரச்சினையை அதன் போக்கில் விட்டு விடச் சொல்லி விட்டார்.
அதன் பின் நிறைய பத்திரிகை நண்பர்கள் கேட்ட போதும் நான் இந்த படம் குறித்து விவாதிக்க மறுத்து விட்டேன்.
இப்போது படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தாகி விட்டது . எனது கதையின் சில காட்சிகளும் , கதை மாந்தருக்கான Character Designs அதில் அப்படியே இருக்கிறது.இரண்டு கதைக்கும் நிறைய பொதுத்தன்மைகளிருக்கின்றன.என்றே வைத்துக் கொள்ளலாம் . ஆனால் எழுத்தாளர்.மாதவராஜின் கதை 75 சதவிகிதம் அப்படியே இருக்கிறது. என்னை விடுங்கள்.எழுத்தாளர்.மாதவராஜ்க்கு எஸ்.ரா செய்தது மிகப்பெரிய துரோகம் .சக எழுத்தாளரின் படைப்பை எந்த மன குறுகுறுப்பும் இல்லாமல் திருடி எடுத்து கையாண்டிருக்கிறார். பெரிய எழுத்தாளர் என்றப் போர்வையில் யாரும் அவரை ( எஸ் .ரா )ஒன்றும் சொல்ல
மாட்டார்கள் . அவரிடம் எனக்கு இந்த அனுபவம் ஒன்றும் புதிதல்ல. இந்த கதையில் எழுத்தாளர்.மாதவராஜ்~க்கும் , திரைக்கதையில் பணியாற்றிய நண்பருக்கும் ( Sankar das )உரிய உரிமையும், இழப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு Naran பதிவிட்டுள்ளார்.
திரைக்கதை தொடர்பாக Sankar das பதிவிட்டுள்ளதாவது: இதை எழுதவேண்டுமா என மனம் சொன்னாலும், உலகிற்கு உண்மை தெரியவேண்டுமே என நினைக்கின்றேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் என்னிடத்தில் அனுப்பிவிட, மந்திர மூர்த்தி இரண்டு பக்க கதையோடு வந்தார். எஸ். ராமகிருஷ்ணன் கதை என்றார். இதை சினிமாவாக்க வேண்டும் என்றார். கதை பீகாரில் தொடங்கி இராமேஸ்வரம் போகும் குடும்பம் விபத்தில் மாட்டிக்கொள்வது; இரண்டு பேர் அவர்களுக்கு உதவுவது பற்றியது. இந்த இரண்டு பக்க கதைக்கு நான் திரைக்கதை வசனம் எழுதக் கேட்டுக்கொண்டனர். உறியடி விஜயகுமார் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆதி தயாரிப்பாளர். திரைக்கதை எழுதும் போது மந்திர மூர்த்தி கள ஆய்வு செய்து சில தகவல்களைத் திரட்டி வந்தார். மார்ச்சுவரி நடைமுறைகள், எம்பாமிங்க் தகவல்கள், கார்கோவில் பிணத்தை அனுப்புதல், சவப்பெட்டி ஆகிய தகவல்களைக் கொண்டுவந்தார். அவற்றைத் திரைக்கதைக்குள் கொண்டுவந்தேன். அவருடைய உதவி இயக்குநர்கள் சில திருத்தங்கள் சொன்னார்கள் அதையும் செய்தேன். என்றாலும் மந்திரமூர்த்திக்கு திரைக்கதையில் முழுமையான நம்பிக்கை இல்லை. இதற்கிடையில் தயாரிப்பும் பாதியில் நின்றது. சில காலத்திற்குப் பிறகு அயோத்தி என்ற தலைப்பில் விளம்பரம் வந்தது. பீகார் குடும்பத்தினரை அயோத்தி குடும்பத்தினராக நான் திரைக்கதையில் மாற்றம் செய்திருந்தேன். சரி வேறொரு தயாரிப்பு நிறுவனம் வேறொரு கதை போல என நினைத்தேன். பின்பு, நான் திரைக்கதை எழுதிய அதே கதையைத்தான் படமாக எடுக்கிறார்கள் எனக் கேள்விபட்டேன். என்னிடம் எந்தத் தகவலும் சொல்லாததால் திரைக்கதையை முற்றிலும் மாற்றிவிட்டார் போல என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபோது திரைக்கதையில் அவர் செய்த மாற்றம் எல்லாம் அபத்தமானதாக இருந்தன.
சான்றாக,
1 சம்பந்தமே இல்லாத சசிக்குமார் ஃபைட்
2 சம்பந்தமே இல்லாமல் கதைக்குள் வந்து பைக்கை விற்று உதவி செய்யும் மதுரை நண்பர்
3. கேவலமாகப் படமாக்கப்பட்ட காவல் நிலைய பாடல்
4. அயோத்தி குடும்பத்தின் சில காட்சிகள்.
5. நாயகன் - நாயகி கதையில் உதவும் தன்மையோடு காதல் உணர்வும் கலந்து எழுதியிருந்தேன். அதை அண்ணன் - தங்கை உணர்வு போல் மாற்றியுள்ளனர்.
மீதமுள்ள 60% திரைக்கதை நான் எழுதியதுதான். அதற்கான முழு ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. அவ்வளவு ஏன் திரைக்கதையை உரிய முறையில் பதிவும் செய்திருக்கிறோம். மனிதன் -ஆத்மா - உறவுகள் குறித்து நான் எழுதிய உருக்கமான வசனங்கள் உள்பட பல சிதைக்கப்பட்டுள்ளன. பல வசனங்கள் அர்த்தமே இல்லாமல் தட்டையாக மாற்றப்பட்டுள்ளன. இத்தனையும் தாண்டிப் படம் பார்த்தோர் நன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர். நல்ல நடிகர்கள் கிடைத்தால் ஒரு படம் நன்றாகப் பேசப்படும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். என் வருத்தம் என்னவென்றால், இத்தனையும் செய்து விட்டு கூச்சமே இல்லாமல் A film by என்று இயக்குநர் பெயர் போட்டுக்கொள்கிறார். இன்னொரு வருத்தம், இந்தப்படத்தின் திரைக்கதை என்னுடையது என்று பலருக்குத் தெரியும். ஆனால் எனக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. என் அறிவை ஒருவன் அபகரித்துச் செல்லும்போது அநாதை போல நின்று பேசுகிறேன். இவ்வாறு Sankar Dass எழுதியுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications