ரவீந்தர் இது தமிழ்நாடு.. உங்க வேலைய இங்க காட்டாதீங்க.. அரசியல் சூழலுடன் பொருந்தும் துணிவு வசனம்?
சென்னை: துணிவு படத்தில் இடம்பெறும் ஒரு வசனம் தமிழக அரசியலுடன் பொருந்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
நடிகர் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் இன்று வெளியானது துணிவு திரைப்படம். இன்றைய தினமே நடிகர் விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாக்கப்பட்ட வாரிசு படமும இன்றே வெளியானது. அஜித் - விஜய் படம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் ரிலீசாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்களுடைய படம் வெளியானது. இருவரின் படங்களும் ஒன்றாக ரிலீஸாகியுள்ளதால் யாருடையது பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகும் என இப்போதே பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன.

முதல் காட்சி
தல - தளபதி படங்களை முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதில் ஒரே தியேட்டரில் வெவ்வேறு ஆடியில் இவர்களது படங்கள் திரையிடப்பட்டதால் அந்த தியேட்டர்களில் ரகளையில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் இரு நடிகர்களின் ரசிகர்களும் கண்ணாடியை உடைத்துக் கொண்டு படம் பார்க்க உள்ளே புகுந்தனர்.

அஜித் பேனர்
கல் எறிதல், அஜித் பேனரை விஜய் ரசிகர்கள் கிழிப்பதும், விஜய் பேனரை அஜித் ரசிகர்கள் கிழிப்பதும் என ஒரே கலாட்டாவாக இருந்தது. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தினர். இந்த நிலையில் துணிவு படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் வெளியிட்டு வருகிறார்கள். பெரும்பாலும் பாசிட்டிவ்வான வசனங்களே வருகின்றன.

அரசியலுடன் ஒத்து போகும் வசனம்
இந்த படத்தில் ஒரு வசனம் இன்றைய சூழலுடன் ஒத்து போவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சமுத்திரக்கனி, மத்திய அரசை சேர்ந்த ஒரு அதிகாரியிடம், "ரவீந்தர்! இது தமிழ்நாடு... உங்கள் வேலையை இங்க காட்டாதீங்க" என வசனம் அமைந்துள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ்
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளதால் இதெல்லாம் உங்கள் செய்கையா அமைச்சரே என உதயநிதியிடம் கேட்டு வருகிறார்கள். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை, அரசியலுடன் தன்னை தொடர்புபடுத்தி பேச வேண்டாம் என அஜித் ஏற்கெனவே அறிவித்துள்ளார். மேலும் தனது படங்களிலும் அரசியல் சாயம் இல்லாமல் பார்த்து கொள்வார். ஆனால் இந்த படத்தில் சமுத்திரகனி இந்த வசனத்தை பேசியுள்ளார்.

முன்னர் எடுக்கப்பட்ட காட்சி
இந்த படம் முன்னரே எடுக்கப்பட்டதாக இருந்தாலும் தற்போது அண்மையில் நடந்த சில விவகாரங்களுடன் அதாவது தமிழ்நாடு வெர்சஸ் தமிழகம் என்ற பிரச்சினையுடன் ஒத்து போவதாகவே பார்க்கப்படுகிறது. மற்றபடி இந்த படத்தில் அஜித் நன்றாகவே நடித்திருக்கிறார் என விமர்சனங்கள் வருகின்றன.

மணிஹெய்ஸ்ட்
இந்த படம் மணிஹெய்ஸ்ட் பாணியில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளையை நிகழ்த்துவது யார், எதனால் நடந்தது போன்ற கேள்விகளுடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் கொள்ளையடிக்க அஜித் வந்திருப்பதாக கூறி அவரும் கொள்ளையர்களுடன் இறங்குகிறார். ஆனால் அஜித் எதற்காக இப்படி செய்கிறார் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அவர் கொள்ளையரா, இல்லை கொள்ளைகாரர்களை பிடிக்க மாறுவேடத்தில் வந்த போலீஸ் அதிகாரியா என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications