திமுகவில் விருப்ப மனு அளிக்க 28-ம் தேதி வரை கால அவகாசகம் நீட்டிப்பு... துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு , புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான கால அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுக தலைவரிடம் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வேண்டுகோள் வைத்ததற்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடைபெறவிருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 17-2-2021 புதன்கிழமை முதல் 24-2-2021 புதன்கிழமை வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுமென ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, திமுக தலைவரிடம் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வேண்டுகோள் வைத்ததற்கிணங்க 28-2-2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம்:பொதுத் தொகுதி - ரூ.25 ஆயிரம் ஆகும். மகளிருக்கும் மற்றும் தனித் தொகுதிக்கும் - ரூ.15 ஆயிரம் ஆகும்.
குறிப்பு: வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணிக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்.
விண்ணப்பபடிவம் தலைமைக் கழகத்தில் ரூ.1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.