டிக் டாக் வீடியோவால் விபரீதம்.. நண்பனையே கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்.. திருத்தணியில் சோகம்
Recommended Video
சென்னை: டிக் டாக் வீடியோக்கள் சமூகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு, இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தலித் சமூகத்தினரை இழிவாக பேசிய வீடியோவை டிக்டாக் சமூக வலைதளத்தில் பரப்பி வந்தார். இதற்கு அவர் நண்பர் விஜய் (16) உடந்தை என கூறப்படுகிறது.
இதை கண்டிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் வெங்கடேசனின் வீட்டு முன்பு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே, காவல்துறையினர் உடனடியாக வெங்கடேசனை கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதற்குள்ளாக வெங்கடேசன் தலைமறைவாகிவிட்டார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், வெங்கடேசனை தேடிவந்த நிலையில், அவரது தந்தையிடம் விசாரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் நண்பன் விஜயை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் எல்லையில் உள்ள சுந்தரம்மா கண்டிகை என்ற மலைப் பகுதிக்கு விஜயை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, சமூகவலைதளத்தில் வீடியோவை பரப்பியது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், விஜய்யை தன் தன் கையில் வைத்திருந்த டவலால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் பயத்தால், திருத்தணி காவல் நிலையத்திற்கு சென்று, சரணடைந்துவிட்டார்.
இதைக் கேட்டதும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜய், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேசன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் ஒருவர் மட்டும்தான் இந்த கொலையை செய்தாரா, அல்லது கூட்டாக சேர்ந்து செய்தாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.